Monday, August 20, 2012

பிறன் மனை நோக்கியப் பெண்பித்தர்கள்...


நோக்கிய இடமெல்லாம் கண்டேன் பிறன்மனை
நோக்கிய பெண் பித்தர்களை
இல்லத்திலொரு தமயந்தி இருந்தாலும்
இவன் நாடுவது என்னவோ நளதமயந்திகளையே...
இவனிற்கு சீர்கொண்டு வந்தவள் சீதைகளாக
இருக்கட்டும் என்பான்...!
இராமனை இராமாயணத்தில் யாரென்பான்...??
கீதையின் சாரத்தை எகத்தாளம் செய்வான்
கீதையின் நாயகர்களாய் இருந்திட ஏங்கிடுவான்
ஐவருக்கும் ஒருத்தியை அங்கீகரிப்பான்...!
சிலம்பின் புலம்பலுக்கு எரிச்சலைடைவான்
கலங்கும் கண்ணகியை கண்டித்து
மாதவிக்காய் மருகிடுவான்...!
திருக்குறளின் நெறிகளை பின்பற்றமாட்டான்
திருவள்ளுவரின் பத்தினியைப் பெருமையாய் பிதற்றிடுவான்...
அம்பிகை போல் அரிவையிவளிருந்தாலும்
இவனாட்சி என்னவோ எழினியையே விழிக்கும்...!
தோழி என்று கள்ளமாய் கதைத்திடுவான்
கூட்டாளி கிடைத்தால் குள்ளநரியாய் மாறிடுவான்...!
மனம்விட்டுப் பேசும் மங்கையையும்
மனதிற்குள் நிர்வாணமாக்கி ரசித்திடுவான்...
பயணத்தின் பக்கத்தில் தேவதையாய் இவனில்லாள்
பயணித்தாலும் இவனது விழிகள் விதியினை மீறிப்
பயணிக்கும் மங்கைகளின் அங்கங்கள் மீது...!!
கிலிமிகுந்த பேதைகளுக்கு பசுத்தோல் போர்த்திய
புலியே புருசர்களாய் வீற்றிருக்க - அவர்கள்
புகுந்த இடமும் புற்றுச் சுவராகிறது...!
மண்டியிட்டு மனையாள் இவனைத் தொழுதாலும்
சண்டியிட்டு இவன் நாடுவதென்னவோ
பிறன் மனை நோக்கியே....
வாழ்வதே வாரிசுகளுக்காய் என்றென்னும்
வாழ்வரசிகளை வணங்கத்தான் வேண்டும்
எத்தனையோ பெண் பித்தர்கள் இருந்தாலும்
இன்னும் பெண்மையை மதிக்கும் நேசிக்கும்
எங்களின் பிறன்மனை நோக்காப் பேராண்மைகள்
இருக்கும் வரை எங்களவர் பெண்டிர்கள்
பாரினில் பலமாய் வாழ்ந்திடுவோம்....


6 comments:

Suresh Subramanian said...

arumai.... unmaiyum kooda.... http://www.rishvan.com

பிரேமி said...

நன்றி தோழமையே... தொடர்ந்து காதலாற்றுப்படையுடன் இணைந்திருங்கள்....:-)

S.V.Sai baba said...

இன்றைய நடப்பை உண்மையாக உரைக்கும் கவிதை . பாராட்டுக்கள்
சாயி பாபா

பிரேமி said...

நன்றி தோழமையே...ஏனைய படைப்புகளுடனும் இணைந்திருங்கள்....

Admin said...

வணக்கம் ..சென்னை பதிவர் சந்திப்பிற்கு வருவதாய் சசிகலாவிடம் சொல்லியிருந்தீர்கள்.வருவதை kavimadhumathi@gmail.com முகவரியில் உறுதிபடுத்தவும்..நன்றி..

பிரேமி said...

மதுமதி! ”வணக்கம் ..சென்னை பதிவர் சந்திப்பிற்கு வருவதாய் சசிகலாவிடம் சொல்லியிருந்தீர்கள்.வருவதை kavimadhumathi@gmail.com முகவரியில் உறுதிபடுத்தவும்..நன்றி..” நிச்சயமாக தோழமையே.....