Monday, August 13, 2012

உயில் ஒன்று என்னவனிற்கு.....

உயிரில் கலந்த என்னவனிற்கு
உயில் ஒன்று எழுதுகிறேன்
துயில் கொள்ளும் முன்பு - இந்த
மயில் சொல்லும் வார்த்தைகளை
வாசித்து வசப்படு...!


கண்ணிற்குத் தெரியும்
பூக்கள் அல்ல நீ.....
காய்த்துத் தொங்கும்
கனியல்ல நீ....
மாறாக
மண்ணுக்குள் நெளிந்தோடும்
வேர்களல்லவா நீ..!!

பட்டாடை உடுத்தி பகட்டு பேசும்
பெண் பித்தனல்ல நீ.....
எளிய ஆடை அணிந்து
ஏற்றமிகு செயல் செய்யும்
செயல் வீரனல்லவா நீ..!!

செய்யும் காரிய காரணங்களை
கருத்தாய் என்னோடு பகிர்வது
உன் பெருமையென்றால்
உனக்கு மட்டும் சேவகம் செய்து
படைத்தளபதியாய்
இருப்பதில் எனக்கும் பெருமையே....

என் நெஞ்சோடு உனை
புதைத்து வைத்திருக்கிறேன்...
நீ பத்திரமாய் இருக்கிறாய்!
என் எண்ணங்களோ
அலைந்து திரிகிறது
உன் பின்னால்....

ஆதவனின் முகங்கண்டு
அடங்கிப்போகும் வெண்மதியாய்
அம்புலியைக் கண்டு மலரும் அல்லியாய்
மாறிக்கொண்டேயிருக்கின்றேன்....

என் இதயத்தை உடைத்து
வெளியேறிச் செல்ல
உன்னால் ஒரு போதும்
இயலாது....




மனதில் அல்ல மாயவனே!
ரத்தத்தில் கலந்து
உடம்பு முழுக்க
ஓட
வைத்திருக்கிறேன்
என் காதலை....


அது எப்போதும்
உன்னை காக்கும்
என்ற எண்ணத்தோடு
காத்திருக்கின்றேன்
உன் காதலுக்காய்....

No comments: