Wednesday, August 8, 2012

பறந்து கொண்டிருக்கிறது மனம்...!

எனது நிகழ்கால
விதியின் வீதியினில்
உனக்கான மலரை - எனது
பக்கக்கிளைகள் ரகசியமாகப்
பூக்கச்செய்கின்றன...!

மௌனமாய் புதைந்து கிடந்த
வார்த்தைகளோ மெல்லமாய்
வெளியேறுகின்றன...!

பாலைக்கும் சோலைக்குமிடையே
திசைமாறிப் பறக்கும் சிறகுகளாய்
பறந்து கொண்டிருக்கிறது மனம்...!

வெட்டப்பட்ட நகங்களாய் - என்
எண்ணங்கள் உன்னிடமே
வந்து விழுகின்றன...!

என் தனிமையின் சுமைகளில்
உன் நினைவுகளே கனங்களாய்...
வறண்டு கிடக்கும் பூமிக்கு
மழைபோல் எனக்கு எப்போதும் நீ...

பாராட்டு தரும் உற்சாகத்தை விட
நீ தரும் பாடங்கள் பலமிக்கவை...!
உன்னைக் கண்டு மருண்ட
நாட்களிலெல்லாம் - உன்
உரிமையை என்னிடம் காட்டி
நம்பிக்கையை நட்டுவைப்பாய்....!

எனது வனத்தினுள்
காற்றாய் ஊடுருவிய - உன்
வாசனையில் என் வதனமும்
குளிர்காய்கிறது...!

ஆலய மணிச்சத்தத்திலும்,
பள்ளியறைப் பாடல்களிலும்
உன்னைத் தேடியே
பரிதவிக்கிறது இதயம்...!


கோயில் கோபுரத்தில்
கூடு கட்டிக் காத்திருக்கும்
மாடப்புறாவிற்கும் எனக்கும்
வித்தியாசமேதுமில்லை...!

பயமற்றுப்போன
உன் இதயத்திலிருந்து
எனக்கான காதல் - ஒரு
புதையலைப்போல் வந்தடைகிறது...!

ஈரமற்றுப்போன
உலகத்தார் முன்போ
நிசம் புரிந்து தவிக்கிறது
நம் நாடகம்...!

என் நினைவில்
உன்னைச் சார்ந்தவையெல்லாம்
முகில் கூட்டமாய் உலவுகின்றன!

இடர்பாடுகள் நிறைந்த
நிகழ்வுகளின் ஏக்கத்தில் திணறுகையில்
உலவும் கூட்டங்களெல்லாம்
விழி வழியே விழுகின்றன...!

என்னவனாய் நீயான பின்னே
எல்லாமே நீயாகி நிலைத்திருக்கின்றேன்
உன்னாலே இருக்கின்றேன் - இதுவே
உலகில் இன்று ஒருவரும்
அறியாத உண்மை...!!

No comments: