Saturday, January 5, 2013

காதல் கீதம்....


முகில் கண்டு நடமாடும்
மயில் போல - உன்
விழி கண்டு மலராடும்
என் மென்மை....

இருளோடு இணைந்தாடும்
மதி போல - உன்
அருளோடு வழிந்தோடும்
என் கண்கள்...

ஒளியோடு சுழன்றாடும்
கதிர் போல - உன்
ஒலியோடு சதிராடும்
என் சலங்கை...

மழையோடு நனைந்தாடும்
நிலம் போல - உன்
இழையோடு நுழைந்தாடும்
என் தேகம்...

பனியோடு நிறைந்தாடும்
இலை போல - உன்
கவியோடு மலர்ந்தாடும்
என் சோலை...

பொருளோடு கலந்தாடும்
கவி போல - உன்
கருவோடு உறவாடும்
என் பெண்மை....

தெரியவில்லை.....

பாதங்கள் நனைய
இறங்கும் வரை தெரியவில்லை
பாசியின் வலிமை

கரங்கள் நகர்ந்து
தொடும் வரை தெரியவில்லை
நெருப்பின் தன்மை

கண்கள் பனிக்க
காணும் வரை தெரியவில்லை
காட்சிகளின் பொய்மை

அலைகள் அசைய
ஆடும் வரை தெரியவில்லை
ஆழத்தின் ஆளுமை

பார்வைகள் ஒளிர
பழகிய வரை தெரியவில்லை
இருதயம் உடைவதை

ஒரு முகம் காண
ரசிக்கும் வரை தெரியவில்லை
பன்முகச் சாயலை

நம்பிக்கை சிதைய
நெஞ்சு வெடிக்கும் வரை தெரியவில்லை
துரோகத்தின் வன்மை.