Monday, August 13, 2012

பொய் ஒன்று சொல்கின்றேன்....

விடியலில் வரும்
கதிரவனைக் கண்டு
நட்சத்திரங்கள் வேண்டுமானால்
காணாமற் போகலாம்!
ஆனால்

என் விடியலின்
விடிவெள்ளியே நீதானே...
ஒளியினில்
இருள் மறைவது போல்
உன்
ஒலியினில்
என்
சோகம் மறைந்தே போகலாம்...

ஓடி வரும் நதி
எதிரில் இருக்கும்
தடைகளைக் கடந்து
இளைப்பாறாமல் கடலை நோக்கி
பயணிப்பது போல்
என் இளைப்பாரற்ற
பயணமும்
உன்னை நோக்கியே இருக்கும்..
எப்பொழுதும்
எனது எல்லாக் காரியங்களும்
நீ இல்லாத போது
நிகழ்ந்து விடுவதில்லை...
ஒவ்வொரு முறையும்
முயன்றுதான் பார்க்கிறேன் ...
இங்கு
ஆணிவேரே அறுந்துபட்டால்
மரம்
எங்கிருந்து தழைக்கும்?
நீயே
இல்லையென்றால்
நான்
எங்கிருந்து வாழ்வது?
நான் உன்னிடம்
துளையில்லாத மூங்கிலாக
இருக்க விரும்பவில்லை
உன் உயிரின் ஒலியில்
இனிய இசையைத் தரும்
புல்லாங்குழலாய்
இருக்கவே விரும்புகிறேன்...
உன்னைக் காணும் போதெல்லாம்
மௌனத்தில்
என் மனம் பேசுவதை
நீ
அறியவில்லையா? 
உயிருக்கும் உடலுக்கும்
உள்ள தொடர்புதான்
உனக்கும் எனக்குமான தொடர்பு!
எனது கவிதைகள்
அறியும் என் நேசம் - ஆனால்
எப்போதும் என்னை
அறிந்ததில்லை நீ...!!
இருப்பினும்
இன்னும் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறேன்
நான்தான் உன் உலகம் என்று....!!

No comments: