Friday, August 10, 2012

காவு வாங்கும் காதல்....

ஒவ்வொரு நாழிகையும் - நீ
அணிந்து கொள்ளும் முகத்திரையில்
உன் காதல் என்னைக் காவு வாங்குகிறது!
இதய தாகத்திற்கு
நீர் வார்க்க உன்னையழைத்தால் - என்
விழிகளுக்கு நீர் வார்க்க விரும்புகிறாய்...
உன்னுடன் நானும்
என்னுடன் நீயும்
பொருதிய முடிச்சுகள் இறுகியிருக்க
முடிச்சவிழ்ப்பிற்கு
ஆள் சேர்த்துக் கொண்டிருக்கின்றாய்...
கீதையை கரைத்துக் குடித்திருக்கிறேன் என்பாய்
சீதைக்காக வருந்துகிறேனென்று மெனக்கெடுவாய்...
சிலம்புக்கும் விளக்கம் சொல்வாய்...
என் புலம்பலை மட்டும் ஒதுக்கிடுவாய்...
நொய்யலாறு நொடிந்திருப்பதால்
ஆடிப்பெருக்கினிலே தீபமேற்ற - என்
கண்ணீரை தாரை வார்த்திருக்கின்றேன்....
பல நேரங்களில்
தேர்வுக்குத் தயாராகும்
இளைஞனைப்போல் - உன் பாவனைகளும்
பாம்பாய் படமெடுக்கின்றன....
எத்தனை தேர்வு எழுதினாலும்
உன் வினாத்தாளும் நானே - உன்
விடைத்தாளும் நானே....!
உன்னுடைய ஒவ்வொரு
அசைவுகள் கண்டு - என்
ஆத்மா மட்டும்
தன்னந்தனியாய்
அழுதுகொண்டே உள்ளது...
பல நேரங்களில்
நம் உரையாடலின் இறுதியில்
மழைத்துளியாய் உதிர்ந்திடுவேன்
விழும் விழிநீரிலும் உன்பால்
என் காதல் நிறைந்திருக்கும்....
விழுந்த நீர்வீழ்ச்சி ஒருபோதும்
நிமிர்வதில்லை
அதுபோலத்தான் நானும்
அருவியாய் விழுந்தாலும்
என் பாதையோட்டம்
உன் நிலம் பார்த்தே விரைந்திருக்கும்...

No comments: