Tuesday, November 29, 2011

உயிரோட்டமாய் ஓர் கடிதம்...

http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/s320x320/313561_248546288540565_100001555869268_672078_458079142_n.jpg
கதவோரம் கதவாய்
நின்று கொண்டிருக்கும் - என்
இனிய செல்லத்திற்கு....

சேகரித்து வைக்கின்றேன்
கனவுகளை பொக்கிசமாக....
இறந்து போன நிமிடங்களை
இயக்கிப் பார்க்கும்
இதயத்து நினைவுகள்....
இரவின் பிடியினில்
இலவசமாய் தாரை வார்க்கும்
பனித்துளிகளின் மத்தியில்
உனக்கு
உயிரோட்டமாய் ஓர் கடிதம்...

உடல் நலம் எப்படி? - இங்கு
அது நல்லபடி.....
மன நலம் எப்படி? - இங்கு
அது உன் வசப்படி....
விரைவில் உன்னிடம்
நான்....
வந்தபின் நம் செயல்பாடுகள்
இப்படியே.....

காற்றுக்குள் ரகசியமாய்
காதல்கதை பேசிடுவோம்
கவலைகளைத் தொலைத்துவிட்டு
கனவுகளை விதைத்திடுவோம்
பொன்தமிழில் பாடிடுவோம்
பூமியெங்கும் வலம் வருவோம்

வரவொன்றும் செலவொன்றும்
வகை வகையா செய்திடுவோம்
வயசோட கனவுகளை
வரமாக செதுக்கிடுவோம்
சுதி வேறு லயம் வேறாய்
சுவரமாக இணைந்திடுவோம்...

மவுனத்தின் மயக்கத்தை
மனசாலே போக்கிடுவோம்
பருவத்தின் தோட்டத்திலே
பல கலைகள் விளைச்சிடுவோம்
வெட்கங்கள் சூழ்ந்தாலும்
வேலியதை கலைந்திடுவோம்

உருவத்தின் நிழல்களை
உயிராக வளர்த்திடுவோம்
உலகத்தின் பார்வையினில்
உணர்வுகளை செதுக்கிடுவோம்
பழங்காதல் பெருமைகளில்
புதுவாழ்வைக் கண்டிடுவோம்


பொழுது விடியவேண்டும்....

http://a7.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/388516_248499145211946_100001555869268_671744_2134297394_n.jpg

கூரையிலிருந்து
விழும் நீரை சேமிக்க
பல வடிவப் பாத்திரங்களை
பாதுகாப்பாய் வைக்கின்றேன்!
விழுந்த நீர்
உடைசல் வழியே
வீட்டிற்குள் ஓர்
ஓடம் அமைக்கிறது..!

ஒட்டுத் துணியும்
நனைந்து கொண்டிருக்க
விட்டுப்போன
நெருப்பை மூட்ட முயற்சிக்க
நனைந்த தீக்குச்சி
நக்கலாய் நகைக்கிறது!

ஈரமான மண் அடுப்பினுள்
குளிருக்கு பயந்து போய்
ஒண்டியிருக்கும் பூனைக்குட்டியை
புறப்பட வைக்க
மனம் இசையவில்லை!
விரிந்த சுவர் வீரியமாய்
பதம் பார்ப்பதற்குள்
வீட்டை சரி செய்ய வேண்டும்...

காலமெல்லாம் காதல் செய்து
வாழ்ந்து பார்க்க கரம் பிடித்து
கூட்டி வந்தவனை
காலன் கூட்டிச்சென்றுவிட்டான்
காலராவினில்...
காரணத்தைக் கேட்டால்
சுற்றுப்புறம் தூய்மையில்லை
வந்தது பதில் வலுவாய்...

வக்கத்த எங்களைக் காட்டி
ஓட்டுக்கேட்ட சீமான்கள்
எங்களையும் கவனிக்கவில்லை
எங்கள் சுற்றுப்புறத்தையும்
சுற்றிப்பார்க்கவில்லை
அவர்கள்
சுற்றுவது எல்லாமே
அயல் தேசமே....

உள்ளூரில் உப்பிற்குக் கூட
வழியில்லாமல்
நாங்கள் பிழைப்பு நடத்துகிறோம்...
பொறுப்பாய் வாழ்ந்த
மச்சான்
பொருமையின்றி
பூமியிலே எனைத்தவிக்கவிட்டு
பரலோகம் சென்றுவிட்டான்

நாளெல்லாம் வாழ்வது
நரகத்தில் என்றால்
நனைந்த பாயின்
ஓரங்களில்
நாயகனின் வாசமோ நளினமாய்...

ஆசையாய்ப் பிறந்த மகனையும்
மச்சானின் மானத்தையும்
அணைத்துக் கொண்டு
கிடக்கின்றேன்...
அடுத்த ஈரம் கண்களின்
வழியே மகனை நனைப்பதற்குள்
பொழுது விடியவேண்டும்
எங்களுக்கும் சேர்த்து.....

Friday, November 25, 2011

இன்னொரு பிறவியும் வேண்டும்......

http://a7.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/386738_246304122098115_100001555869268_666884_2085412291_n.jpg


என் காலத்திற்குரியவனே....
நீ
இமை விரித்துப் பார்க்கையிலே
என்னிதயம் மட்டுமல்ல
என் வாழ்வும் ஒளி பெறுகிறது...
ஆனால்
என் பார்வையோ பழுதாகிறது...
உன்
வருகைக்குப் பின்னேதான்
நந்தவனங்களாய்
என் காலங்கள்
பூத்துக்குலுங்கின...
நொந்த இதயமோ
துளிர் விட்டு
தூறலாய் இசைத்தன....
நீ
தலை நிமிர்ந்து நடக்கையில்
உன் பாதையின் நிழலாய்
தலை குனிந்தே தொடர்கின்றேன்
நீ
அடி எடுத்து உள்ளே நுழைந்தாய்
என் இல்லமும் இதயமும்
அகலிகைகளாய்
சாப விமோசனம் பெற்றன....
உனக்கு
பௌர்ணமி இரவுகள்
இன்பத்தை இழைத்தாலும்
எனக்கு
உன் பொன் தமிழ் மட்டுமே
எழுச்சியை அளிக்கின்றது...
எத்தனையோ
சிந்தனைகளில் - நீ
ஆழ்ந்திருந்தாலும்
இலைமறை காயாக
உன் புன்முறுவலை
எனக்கு விட்டுச்செல்வாயே
அதை மீண்டும் வாங்குவதற்கு
இன்னொரு பிறவியும்
வேண்டுமென்று - உன்
ஆண்டவனை அணுகுகின்றேன்...
உன்
வெயில்காலப் பார்வையில்
பயந்து ஒதுங்கி பயணித்தாலும்
உன்
குளிர்கால மவுனத்தில்
குறைந்தே போகின்றேன்....
ஆயினும்
எந்த நிலையிலும்
என்னோடு நீயிருந்தால்
என் காலங்கள்
வசந்தமாகும்...
என் உணர்வுகள்
உயிர்ப்பெறும்!

Sunday, November 20, 2011

உன் கவியே ஆறுதலய்யா......

http://a3.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/304122_243208315741029_100001555869268_658261_1555613096_n.jpg

வாக்கு சொல்லி வன்மையாய் வம்பளந்தவரே
போக்கு காட்டி பொழப்புத்தனம் செய்தவரே
இட்டுக் கட்டிப் பாடுற புள்ளையை
சட்டென விட்டுப் போறதென்னவோ?

பட்டணத்து வண்டியிலே பவுசாகப் போறவரே
விரைவு வண்டி நீயேறி விரைவாகப் போகையிலே
குருத்தான எம் மனசும், சிறுத்தான என்னுடம்பும்
கருத்தேதான் போகுமய்யா; கரையேறி வாருமய்யா

கரை வேட்டி கட்டிக்கிட்டு கரம் தூக்கி
கடவுளை நீ கும்பிடுகையில்
கருப்பண சாமியா கண்முன்னே
காட்சியா நிற்குறீரே......!!

ஒத்தையிலே நானிருந்தாலும்
சத்தான உம் பேச்சும் சங்கடமில்லாமலே
முத்தாக முறையாக இனிக்குமய்யா...
மத்ததெல்லாம் மறந்தேதான் போச்சுதய்யா....

சொப்பனத்திலே நான் மிதந்தேன்
சொந்தமாக உனை நினைச்சு
கப்பங்கட்டும் அடிமை போல
கருக்களிலும் காத்திருப்பேன்...

ஊட்டி மலைச் சாரலிலே
பாட்டுக் கட்டி இருந்திருப்பேன்
அலையடிக்கும் கடல் போல
அடிமனசில் தவிச்சிருப்பேன்

உம் பேச்சு கேட்காமல்
ஒரு நாழி இருந்ததில்லை!
மௌனத்தில் நீ போய் உட்கார்ந்தா
மரணத்தோட பேச்சு வார்த்தை நடத்திருவேன்....

மூவாறு நாளைக் கடத்திட
வழியேதும் தெரியவில்லை....
மூணு ஜென்மம் கடந்தது போல்
முழியும்தான் பிதுங்குதய்யா...

பொட்டச்சியின் பொலம்பலில்
பொட்டல் வெளியும் நடுங்குது
சொந்தமென்று யாருமில்லை - என்
சொர்க்க புரியும் நீதானய்யா...!

கால நதியின் கார்மேகமே - என்
கண்ணீரின் அருமருந்தே
கரம் பிடித்து நீ சொன்ன - உன்
கவியே என் ஆறுதலய்யா...!

தாலி ஒண்ணு கட்டிக்கிட்டு
தாரமாய் உன்னோட வாரேனய்யா
தங்கமகன் நீ இல்லேனாலும்
தரம் கெட்டுப் போகமாட்டேனய்யா.....

Wednesday, November 16, 2011

உனக்காய் ஒரு கவிதை

http://img.phombo.com/img1/photocombo/6644/cache/Art_of_Painting__Chinese_Girl_Illustration_wallpapers_1280_x_960_pictures-4.jpg_romance_girl_bi41162_wallpaper_display.jpg

வீரியமாய் பெய்யும் மழைக்கு
ஒரு கவிதை
மெலிதாய் விழும் தூரலுக்கு
ஒரு கவிதை
சில்லென்று வீசும் தென்றலுக்கு
ஒரு கவிதை
மெல்லமாய் எட்டிப்பார்க்கும் கதிரவனிற்கு
ஒரு கவிதை
வெட்கமாய் மறைந்து செல்லும் நிலவிற்கு
ஒரு கவிதை
மழையை சபித்துப் பறக்கும் பட்சிக்கு
ஒரு கவிதை
பரந்து கிடக்கும் இலைச்சருகுகளுக்கு
ஒரு கவிதை
மழை நீரில் விளையாடும் மழலைக்கு
ஒரு கவிதை
என்னை அறிமுகம் செய்த அப்பா அம்மாவிற்கு
ஒரு கவிதை
இத்தனையும் கொடுத்த பரம்பொருளுக்கு
ஒரு கவிதை
பார்த்து ரசிக்கும் பலவற்றுக்கு
ஒரு கவிதை
தினமும் இப்படித்தான்
எழுத எத்தணித்து அமர்கின்றேன்
காகிதத்தில் நீ...
அத்தனையும் மறந்தபடி
ஆரம்பிக்கின்றேன் மறுபடியும்
உனக்கான கவிதையை!!

Saturday, October 8, 2011

கண்ணீரே அருமருந்து......


துணையும் துடுப்புமின்றி
வான கடலில்
காற்றின் வேகம் கணிக்காமல்
நீந்திச் செல்லும்
விந்தை நிலவாய் - நானும்
நீந்திச் செல்கின்றேன்....
எதிரில் வருவதும் போவதும்
அறியவில்லை...!!
ஆயிரம் ஆசைகள் மனதினில்
சுழலுது... - ஆயினும்
அற்ப ஆசையும் கண்ணுக்கு
மறையுது!
கதிரொளி, நிலவொளி
இருந்தென்ன லாபம்?
கண்ணொளி மிளிராமல்
மங்கியே கிடக்குது!
உள்ளம் அமைதியின் உருவகமாக
தென்றலின் துணையோடு
நீந்துமென நினைந்திருக்க
ஏமாற்றமே ஏகாந்தமாய்
வியாபித்திருக்கிறது!
சிறுமீனை இரையாக்கும்
பெரிய மீன்களையே பெரும்பாலும்
பார்த்துச் சலிக்கின்றேன்....
நத்தையைத் தின்னும் நாரையாய்
உள்ளத்தைக் குதறும் உயர்ந்தோரே
நிறைந்திருக்கின்றனர்...
உடையை மாற்றுவதுபோல்
உள்ளத்தில் புதைந்திருக்கும்
நேசத்தை மாற்ற முடியாமல்
நிசத்தை நினைந்து நிதானிக்கின்றேன்....
முள்ளையும் மலரையும்
தொட்டுப்பார்த்து குணம்றிந்தவள்
நின்னைத் தொடாமலே
நின் மனமறிந்தவள் நானடா...
விளக்கைத் தொட்டு
சாகும் விட்டில்போல் - உன்
நினைவாலேயே சாகின்றேன்...
விரிசலில் வளரும் விதையாய் - உன்
பிரிவினில் என் காதலை
கண்ணியமாய் வளர்க்கின்றேன்....
ஆறுதலுக்கு என் கண்ணீரே
அருமருந்தானதால்
அழுது தொலைந்தே தெளிகின்றேன்...




Sunday, September 18, 2011

எல்லை என் தொல்லைக்கு எப்போது?

http://img.phombo.com/img1/photocombo/6644/cache/Art_of_Painting__Chinese_Girl_Illustration_wallpapers_1280_x_960_pictures-8.jpg_Art_paintings_of_girls_b764_display.jpg

வெள்ளி மறைந்த நேரம்
ஒளி சுமந்த கதிரவன்
வீதியெல்லாம் சிவக்க
விதிகாட்டும் வழியினிலே
உறங்காத விழிகளும்
சிவப்பாய் விழித்தன!

மதியும் மறைந்து
அலைகடலின் ஆழத்திற்குள்
அதிவிரைவாய்ப் பயணிக்க
எண்ண ஓட்டமும்
அதிவேகமாய் முந்தைய இரவின்
நிகழ்வை நினைத்து தடுமாறியது!

உன் எண்ணச் சிதறல்களால்
கல்லாகிக் காணாமல் போனேன்
காயங்கள் வடுவாகிக் கண்டேன்
கண்ணீரும் வற்றிப்போக
வழியில்லாமல் போனேன்.....

என்
கனவுக்கும் கால் ஒடிந்தது
கண்டு இடிந்தேதான் போனேன்
ஆறுதல் சொல்ல ஆளின்றி
ஆழிப்பேரலையானேன்....
http://img.phombo.com/img1/photocombo/6644/cache/Art_of_Painting__Chinese_Girl_Illustration_wallpapers_1280_x_960_pictures-9.jpg_Art_paintings_of_girls_bi41153_display.jpg
கற்பனை சுகத்தில் மயங்கும் - உனக்கு
மனச்சோகங்கள் எப்போதும்
கலக்கத்தைத் தருவதில்லை...
அர்த்தமற்ற செயலுக்கு
வார்த்தைகளால்
அக்கினி மழை பொழிந்து
வஞ்சிக்கின்றாய்!

உதடு மீறிய உனது சொற்களால்
புதைந்து போன ரணங்களும்
புத்துயிர் பெறுகின்றன!
உன்னோடு உரையாடும்
நேரமெல்லாம்
நெருப்புக்குளியல்தான்!
இறுதியில் சாட்சி சொல்ல
சாம்பல் கூட மிஞ்சுவதில்லை....

வாடைக் காற்றின் வசந்தத்தில்
வஞ்சியிவளின் உள்ளமும் எரிய
சூழ்ந்து நிற்குமிடமெல்லாம்
கருகிய வாசனை!
வாடையில் வருந்திய மயிலுக்குப்
போர்வை தந்த புண்ணியபூமியில்
பிறந்தவன் தானே நீயும்!!
http://img.phombo.com/img1/photocombo/6644/cache/Art_of_Painting__Chinese_Girl_Illustration_wallpapers_1280_x_960_pictures-15.jpg_Art_paintings_of_girls_bi638_display.jpg
ஈர உணர்வுகளை
இழந்து போன உனக்கு
இதயத்தின் வலியை
உணர முடியாது!
வலி மிகுந்த எனக்கோ
விதி வலியது என்பதும்
உணரமுடிகிறது!

போக்கிடம் எனக்கில்லை
போகுமிடம் தெரியவில்லை...
எல்லை என் தொல்லைக்கு
எப்போது?


Wednesday, August 31, 2011

சிக்குண்டு கிடக்கும் சின்ன இதயம்....

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEik4YXEJ4PAoIfXEAPlPYuv4Sh7TwSXsxirqhuv2QijFJ2UGTA_V9uVKwpRbXubX54QbEIGxu8pCisNNp_CfaMppSp3tYy3odPkSN87HcfO7PRGcqubbx6RQnKPI_A64eTEfrQi9kGxRz53/s1600/Love%2520photos%2520(5).jpg

காதலனே.....
காத்திருந்தேன் உன் காதலின்
வலிமையை வாய்மொழியாய் - நீ
என்னிடத்தில் பறைசாற்ற...


உறக்கமற்ற இரவில்
உரிமையாய் அழைத்தாய்....
செல்லமே...
தேகம் சிலிர்க்க நிமிர்ந்தேன்
தேக்கிவைத்த கண்ணீர் - உன்
விரல்பட்டு சிதறிவிழ...

மெல்லமாய் இழுத்து
இதமாய் அரவணைத்து
காதுகளின் ஓரத்தில் - உன்
சுவாசத்தை இயக்கி.....
உன் ஸ்பரிசத்தை என்னவென்று
சொல்லி மாய்வது?

சொல்லமுடியா சோகத்தில் - நான்
சோர்ந்து போய் நிற்கும்போதெல்லாம்
எனை சுகப்படுத்தி பார்ப்பதையே
வாடிக்கையாக்கி சுகப்படும் - உன்
சின்ன இதயம் இன்று என்னிடம்
சிக்குண்டு கிடக்கிறது....

ஜென்ம ஜென்மாய் தேக்கிய
ஏக்கங்கள் இன்று - உன்
பார்வையின் பயனால்
தீர்ந்து சரிகின்றது....

என் கண்ணில் மட்டும் நீ
கலந்துறவாடவில்லை...
என் ஆத்மாவினிலும்
ஐக்கியமானவன்...


இது
நீ எனக்குத் தந்த வரமா?
இல்லை
காலம் உனக்குத் தந்த சாபமா?

என் இதயமும், விழிகளும்
மூடித் திறக்கும் நேரத்தில்
எல்லாம் இனி நீ நிற்பாய்
என்ற நம்பிக்கையில் - உன்
தோள் சாய்கின்றேன்

Friday, August 26, 2011

கண்ணான ராசாவே .....

http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/301353_204796679582193_100001555869268_538975_8212694_n.jpg

கொங்கு நாட்டு கோமகனை
கொளத்தோரம் காணலியே...
சேரநாட்டு சின்னவனை
சோளக்காட்டோரம் காணலியே..
கரும்புக் காட்டுப் பக்கத்தில
காலை மாலை காத்திருந்தேன்
காணாமல் போன மச்சான்
கருக்களிலும் காணலியே...

தங்கச் சிலையாட்டம்
தவிச்சுத்தான் நானிருக்கேன்
தங்கமான மச்சானை
தாலிகட்டவும் காணலியே...
நேசமுள்ள மச்சானே...
நெஞ்சாவி துடிக்குதய்யா
உன்னைக் காணாமல்
காப்படி உசிரும் கூட
கருத்தேதான் போச்சுதய்யா..

என்
நேர்வகிட்டு உச்சியிலே
உன் உசிரைத்தான்
நிறைச்சு வச்சேன்...
உன் உதட்டோர மீசையில
என் உசிரைத்தான்
புதைச்சு வச்சேன் புரியலியா..
தலையெண்ணெய்
வழிஞ்சு போனாலும் - என்
எண்ணம் மட்டும் வழியலியே...
சாதிசனம் வந்தாலும்
தயங்காமல் சொல்லிடுவேன்

கரிசல் காட்டு பூமியிலே
நான்
காத்திருந்த வேளையில - நீ
பூசு மஞ்சள் விதைச்சுவச்ச
இடமெல்லாம்
உன் பாதத்தோட வாசம்தான்
பாசமா படர்ந்திருக்கு...
நேசமா நீ நெருங்குவது
எப்போது?


நெல்லுக்கதிராக நெடுந்தூரம்
வளர்ந்து நின்னேன்...
கோவை கொய்யானு
என்னை கூப்பிட்டு சிரிப்பானே
ஆசையில ஓடிவந்தா
அள்ளித்தான் அணைப்பானே..
ஆசையுள்ள மச்சானே - நீ
கோபப்பட்டும் போகலியே
பொழுது சாயும் காணலியே...

செவ்வந்தி தோட்டத்தில
சேதி ஒன்னு வச்சிருக்கேன்
சீக்கிரமா நீ வந்தால்
சூசுகமா சொல்லிருவேன்...
கண்டாங்கிச் சேலையிலே
கட்டில் ஒன்னு செஞ்சிருக்கேன்
எட்டு முழ வேட்டி கட்டி
நீ வந்து சேருமய்யா.....
அடுத்த வீதி ஆசாரியிடம்
தொட்டில் ஒன்னு செய்யச் சொல்லி
துட்டும் தான் கொடுத்திருக்கேன்...


கருவாச்சி நானிங்கே
காரக் குழம்பு ஆக்கி வச்சேன்
கருத்த மச்சான் நாவிற்கு
நளபாகம் நாளும்தான்
நோகாமல் செஞ்சுவச்சேன்
நோன்பு பல நானிருந்தேன்

நொய்யலாற்றங் கறையினிலே
ஒன்னோட குழலுச்சத்தம்
நொடிக்கொருதரம் கேட்குதய்யா
பாவிமக பாட்டுக் கேட்க - உன்
பாழும் நெஞ்சு துடிக்கலையா...

பக்கத்தில சொந்தமிருந்தும்
துக்கத்தில் நானிருக்கேன்
வாக்கப்பட்டு வருபவளை
வாயாட விட்டு விட்டு
வழிமாறிப் போனதேனோ

புதன் கிழமை சந்தையிலே
வாங்கி வந்த காளை கூட
பொழப்பு நடத்த சோடி தேடுதய்யா
புழக்கடைக்கு பக்கத்திலே
பொழம்பியே கிடக்கிறேன்

நெஞ்சுக்குள்ள இருந்த ஒன்னை
கண்ணுக்குள்ள பூட்டிவச்சேன்
கண்ணுறக்கமில்லாமல்
களைப்பாகி கற்பூரமாய்
கரைஞ்சேனே.....

வெளியூரு சென்றிருந்தால்
கடிதம் ஒன்னு
வரைஞ்சிருப்பேன்
சென்ற இடம்
தெரியவில்லை
விலாசம் எதுவும்
அறியவில்லை!
கண்ணீரில் கடிதம் எழுதி
காற்றோடு அனுப்பி வச்சேன்
கண்ணான ராசாவே
கைக்கு வந்து சேர்ந்துச்சா?







Saturday, August 20, 2011

காதல் வெல்லுமா

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSU5O0ZhPo81T80HW7l9vdfKtfb64KhFn8qnAYq5NJyxG9O12ZX

கண்ணை மட்டும்
கசக்கத் தெரிகிறது
காதலை சொல்லத்
தெரியவில்லை
கண்ணீர் மட்டும்
காரமாய்க் கரிக்கிறது
காயங்களை ஆற்றத்
தெரியவில்லை

கற்றுக்கொண்ட வார்த்தைகள்
கவனமாய் வெளியேறியும்
கனத்துப்போன இதயமோ
காதலை சேமித்து வைக்கிறது
கடந்து போன நினைவுகளோ
கவிதைகளோடு போரிடுகிறது
http://th08.deviantart.net/fs29/300W/i/2009/067/6/5/Bloody_Field_by_SadGirl311.jpg
குறையாத நேசிப்போடு
குவிந்த புன்னகையில்
கலைந்து போன கனவுகளோ
கண் முன்னே கண்ணாடியாகிறது
காட்சிகள் யாவும் கலைக்கப்பட
கலவரம் சூழ்கிறது நெஞ்சுக்குள்ளே

கசக்கி எறியப்பட்ட காகிதமாய்
கவலைகள் கடைந்தெடுக்க
காதலின் வலி மிகுந்த காலங்களை
காரணத்தோடு மறைக்கின்றேன்
கன்னக்குழியில் விழுந்த கண்ணீரை
காற்றோடு கறைக்கின்
றேன்
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSn6HgRvLPj6npTmd1Gqkv4ON_dQH6hq0XlaXbdNWhC5vCAWhyx
காலத்தின் மௌனத்தை
காதல் வெல்லுமா
காத்திருத்தலின் நேரத்தை
காயங்கள் சொல்லுமா
கோலத்தின் தனிமையில்
கொண்டதெல்லாம் வரமே...




வேண்டும்....


காலையும் மாலையும்
காரிருள் வேளையும்
கண்ணோடு - உனை
காணவேண்டும்...
காணாதபொழுதெல்லாம்
மண்ணோடு நானும்
மடியவேண்டும்...

உனக்கானதெல்லாம்
தேடித் தேடி
கொணரவேண்டும் - நீ
வாடியபொழுதெல்லாம்
உனை
நாடி நாடியே
வாரியணைத்திடல் வேண்டும்...

உன்னோடு
ஓடி ஓடியே
பாடித் திரிந்திட வேண்டும்
அதிலே மனம்
ஆடி ஆடியே களித்திட வேண்டும்
தமிழால் உனைப் புகழ்ந்து
கோடி கோடியாய் கவிகள்
புனைய வேண்டும்...

அறுகம்புல்லின் அமைதியாய்
உனை
ஆட்கொள்ள வேண்டும்...
ஆலம் விழுதின் ஆசையாய்
உனை
நேசித்திட வேண்டும்...
இளகும் நெஞ்சம் முழுவதுமே
உனை
நிறைத்தே நினைந்திருக்க வேண்டும்....

உன்
அன்பின் அலையில்
அடித்தே செல்லவேண்டும்...
என்
ஆன்மா அடங்கும்போது
உன்
மடிசாய்ந்து மடிந்திடவேண்டும்...

Saturday, July 30, 2011

உன் புன்னகைப் பூக்கள்....

எங்கும்
சிதறிக் கிடக்கிறது
உன் புன்னகைப் பூக்கள்....

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQ7XOlMhKRfJdvHRcgg4SUwFdAEoGSDIMf_tH1feP3-uVFUgqAJ
உயிர் எங்கும்
ஒட்டிக் கிடக்கிறது
உன் காதலின் கவிகள்...


ஆன்மாவின் அடிவரை பாயும்
அந்த வாக்கியங்களில்
என் பிறப்பின் நேரம்
பாக்கியமடைக்கின்றது...

http://www.vaarppu.com/2005/p/pookkal_nikath_jul05.jpg
அடிக்கடி ஞாபகத்திற்கு வரும்
உன் புன்னகை முகத்தில்
என் முகத்தைத் தேடியே
தொலைகின்றேன்....

உறக்கத்தின் உச்சியிலும்
தலையணை தவிர்த்து
உன் நினைவுகள் மீதே
தலை சாய்த்து படுக்கின்றேன்...

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQWOecEKWAfSJbAIH-IXbY-j9_YyC_U7buzoQFOIsiZxcfa7TYTNA
எப்போதோ நீ கொடுத்த
சத்தமில்லா முத்தத்தின்
சுவடுகள் இப்போதும் ஈரமாய்
என் கன்னங்களில் குளிர்கிறது!

உன் காதலில் எல்லாமே
நிறைவாகிப் போகின்றது - உன்
அருகாமையற்ற நேரங்களைத் தவிர...!

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQ8YOdnE11OVE9HpX1I8EyJYwUcx72uxFyq91NU2YFnUlw5IAnr
கவிஞனாய் பல கவிகள்
புனைந்தாலும் - உன்
மௌனமொழிகளுக்கு இதுவரை
ஒரு கவிதையும் என்னால்
ஏட்டில் ஏற்றமுடியவில்லை...!!

நீ ஆசானாய் பாடச்சுமைகளை
சுமக்கின்றாய் - நான்
உன் நினைவுச் சுமைகளை
நித்தமும் சுகமாய் சுமக்கின்றேன்...!

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQZKCTJEkcbUIlYKcRUQk-Ttj3pDt84C9eKZcHFF4Yhx-EWn2s8
என் எழுத்துக்களில்
எழுதிவிட முடியாத
உன் காதலின் ஆழத்தை
நம் இருவரின் நெருக்கத்தில்
உணர்கின்றேன்...

துளி நம்பிக்கையிலும்
உளி வைத்து செதுக்குகின்றேன்
உன்னோடு பயணிப்பேன் என்று...

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQ0QtNp6EgDez_Au6BX1L5rXKvek9FHdG7G996ZwnbJP2R41ta8
இந்த எதிர்பார்ப்புகள்
ஏமாற்றத்தை அளித்தாலும்
நீயில்லாத நீண்ட பொழுதுகளில்
மூர்ச்சையாகிப்போன
என் சுவாசங்கள்
உன் நேசிப்பில் மட்டுமே
உயிர்த்தெழுகின்றன...

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSbKQM8A1maBzHsqwqIJR4IXWuTS9eb0EWU-l4TODjIh1Hw-fgq6w
இதோ இந்த
நினைவுகள் எல்லாம் இப்பொழுது
விழிகொண்டு கண்ணீர்விட
காத்திருக்கின்றன....



அழகிய நிலா !!!

http://www.hdwallpapers.in/thumbs/end_of_love-t2.jpg
அழகிய நிலா !!!
எப்போது பிறந்தாயோ ?
நிலவோ வளரும் தேயும்
நீயோ
வளர்ந்தே இருக்கிறாய்

எப்போது பூத்தாயோ ?
குறிஞ்சியின் இலக்கணம்
கொஞ்சமும் இல்லை
காதலெனும் நோய் செய்தாய்
கவிதையெனும் பூப்பெய்தாய்
காற்று மகள் வழியாக
கனவுகளை நெய்தாய் -- என்
உயிர் என்ன செய்தாய் ?

சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று
சொல்பவன் கவிஞன் இல்லை
வெல்வதற்கு வைத்திருக்கிறாய்
இதயம் முழுவதும் வெண்மையாய்
புருவம் வில்லாய்....கண்கள் வாளாய் ...
சொற்களும் வாய்மையாய்...
எண்ணங்களும் நேர்மையாய் - உன்
வண்ணங்களும் தூய்மையாய் ...

தென்றலே...
மொத்தத்தில் - நீ
அமைதிக் குளத்தில்
பூத்த அழகிய நிலா !!!

Friday, July 29, 2011

இனியென்ன சொல்வதற்கு ???


நான் கவிதை
எழுதுவதில்லை
என் காயங்கள் வலிப்பதில்லை
கோபங்கள் சுடுவதில்லை
ஏமாற்றம் வெறுப்பதில்லை

நானும் இருப்பதில்லை
பெயரளவில் இறப்பதில்லை ...

எரிகின்ற நெருப்பை வாங்கி
எனக்குள்ளே ஊற்றி ஊற்றி
புரிகின்ற காதல் பாடம்
போதித்த புத்தன் ஆவேன்

சரிகின்ற அழகில் கொஞ்சம்
சரியாமல் வாழ்ந்த நெஞ்சம்
புரியாமல் பேசிப் பேசி
போனது உன்னில் தஞ்சம்

கண்ணீரைத் துடைத்து விட்டு
கவிதைகள்
எழுதுகின்றேன்
பெண்ணே நீ பார்க்கும் போதும்
பொய் முகம் காட்டுகின்றேன்

செந்நீரும் சுண்டி
சேர்கின்ற காலமில்லை
சுடுகின்ற நெருப்பெடுத்து
சுடுவதும் காயமில்லை
வடுகொண்ட வார்த்தை எல்லாம்
வாசித்தே பழகிவிட்டேன்
நடுவானில் நிலவின்றி
நாட்களைத் தொலைத்து விட்டேன்

அவசரத் தேவைக்கு
அன்புதான் வேண்டுமென்று
அறிவிப்பு விட்டதில்லை
நீயறிவாய் என்னவென்று

கரையிலே விழுந்த மீனின்
கண்களில் கலக்கமில்லை
தரையிலே இருக்கும் மரத்தின்
இலைகளைக் காணவில்லை
என்பதனாலே எல்லாம்
இயல்பாக இருக்குதென்று
நம்புதல் இருக்குமானால்
நம்பிக்கை சிதைப்பதில்லை

இனியென்ன சொல்வதற்கு
இனிமேலும் கவி எதற்கு--
விடியட்டும் பொழுதெனக்கு
வழக்கம் போல் சுழல்வதற்கு ...

Thursday, July 14, 2011

தத்தி தத்தி தவழ்ந்து வந்த தமிழ்க்குழந்தை....

http://photos-a.ak.fbcdn.net/hphotos-ak-snc6/281372_184258354969359_100001555869268_473602_2052429_s.jpg

தாயுமானவர் வழியனுப்ப
தமிழன்னை கரையேற்ற
கரம்பிடித்து மிதக்கின்றாள்
என் தமிழ்க்குழந்தை....!!

அந்தி சரிந்த நேரத்திலும்
என் தமிழ்க்கண்ணே - உன் வரவால்
இருளும் ஒளியாகிப் போவதென்ன!!

முல்லை மலர் காலெடுத்து
முத்துரத்தினமாய் பிரகாசிப்பவளிற்கு
இன்று ஏனம்மா சோகம்??

தென்பொதிகையில் பிறந்தவளே...
அரபிக்கடல் வரை வளர்ந்தவளுக்கு
அக்கறைக்குப் போவதற்கா கலக்கம்...!!??

எக்கறைக்குப் போனாலும் உன்
ராஜாங்கமே தலைத்தோங்கும் போது
கவலை வேண்டாமடி கண்ணம்மா.....

தேனை மறந்து வண்டாடலாம்
என் செல்லத் தமிழே - உனை
எப்படி மறந்தாடுவேனடி!

மூவேந்தர்கள் போற்றி வளர்த்ததும்
உன்னைத்தானடி..!! - என் கொடியவளே...
முக்கனியின் சுவையோடு கொண்டிருப்பதும்
உன் பெருமைதானடி..!! - என் கனியவளே....

இலக்கணமும், இலக்கியமும் கண்டவளே..
இன்னல்கள் கடந்து வந்தவளே... - இந்த
நதிநீரைக் கடப்பதா உனக்கு கடினம்?

கன்னித் தமிழாய் காலத்திற்கு அழியாத
காவியக் குழந்தையடி நீ... - உனக்கு
கங்கை நீரும் கானல் நீரடி...!!

மானுடம் கண்ட முதல் குழந்தையடி நீ..
மண்ணிற்கு வந்த முதல் மொழி தெய்வமடி நீ...
பார்வைக்கு எப்போதும் மழலையடி நீ...
ஆனால் எனக்கு எப்போதும் அன்னையடி நீ...

என் அன்பு செல்லமே...
அப்பன் எப்போதும் வழி நடத்த
அன்னை எப்போதும் உடனிருக்க
பாரெங்கும் சுற்றி வாடி என் கலையவளே..

பாவலர்கள் எப்போதும் உனை
சுற்றி சுற்றி சுகம் பெறட்டும்!!!
பார் போற்றும் பைந்தமிழே....
உன்னைச் சரணடைந்து
பாடுவதும் என் பாக்கியமே.....!!!


Tuesday, July 5, 2011

காதல் பயணம்....

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQq7A_1tKCIiTFCdfWAc9lzKPkqcHUF668ThZGpp0CncGrVAFYz

உதட்டு உப்பரிகையில் மிதமிஞ்சிய
பன்னீர்ப் புன்னைகையை
சிந்திவருபவனே....
உச்சியைத் தொடும் உலகத்தில்
ஓர் வீணையின் சிலிர்ப்புடன் நிற்பவனே....

ஒளிர்ந்து வந்த சூரியனில்
உன் கண்களின் ஒளி
பூமி முழுவதும் சிதறிக்கிடக்கின்றது...
மலர்களின் தீண்டலில் உன்
கவிதைகள் என்னை கைது செய்து
உன் வாசல் வரை அழைத்துச் செல்கின்றது...
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcT33xTnMvdug4EC9a5XELKWfcAd3fgjA9tLIiPwbkNZRK0NwR5DOg&t=1
பதுங்கி வந்த பகல்நிலவாய்
உன் குளிர்த் தழுவல்கள்
என் உயிர் முழுதும் பரவிக்கிடக்கிறது.....
உன்னை அழைக்கும் போதெல்லாம்
எனக்குள் உறைந்திருக்கும் உயிர்நதி
அருவியாய் அவதாரமெடுக்கிறது...

உன்னோடு உரையாடும் போதெல்லாம்
எனக்குள்
ஒளிந்திருக்கும் துக்கங்கள்
குறைக்கப் பட்டிருக்கின்றன....
http://www.desicomments.com/dc1/07/127164/127164.jpg
விடியும் பொழுதெல்லாம்
சின்னதாக சொல்லித் துவங்கும்
காலை வணக்கத்தில்
ஆரம்பிக்கும் எனக்கான பொழுது
நீ இரவு வணக்கம் சொன்னபிறகுதான்
முழுமையடைகின்றன ......

உனக்குள் இடப்பெயர்ச்சி செய்த
என் இதயத்தின் ஒரு பகுதி - நீ
இப்பொழுது இடம் பெயர்ந்ததால்
உன் தெருவோர வீதியில் கிடக்கின்றது!
முடிந்தால் அதை பத்திரப்படுத்து
உன்னைத் தவிர என்னை வேறு
யாராலும் பாதுகாக்க முடியாது....

உனக்கும் எனக்கும்
இப்பொழுது
ஓர் எல்லையில்லாப் பயணம்
தேவைப்படுகிறது...
பயணம் என்பது வெளிப்பயணமல்ல
நமக்குள் நாமே செல்லும்
புனிதப்பயணம் காதல் பயணம்....

Saturday, July 2, 2011

காலாவதியாவதில்லை...!

நேற்றைய பகல் முதல்
அந்திவரை நீண்டிருந்த
நேரம் முதல்
உன் அருகாமையற்ற
வேலையின் கனத்தை
அறியத்தொடங்கினேன்...!

இல்லாத தூக்கத்தின் கனத்தை விட

நீயில்லாத ஏக்கத்தின் கனம்
மிகக் கொடுமையானது...!

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQAc2FubO_iJQNJnoh5LjIck9u3Skbi6ExwHvgy9G_znHo5un52
நீ அருகில் இல்லாத போது இருக்கும்
உன் மீதான கோபம் உன் அருகாமையில்
அர்த்தமற்று தோற்றுப் போகிறது!
காதலும் அதுபோல்தான்... - உன்
ஒரு நாள் விலகளில்தான் அதன்
அருமையை உணர முடிகிறது.......

எங்கும் பேரமைதி
இருளாய் எனைச் சூழ
சாகசங்களை நோக்கிச் சென்றவள்
இப்பொழுது வீழ்ச்சியின்
எல்லை வரை சென்று திரும்ப
முடியாமல் தினம் தவிக்கின்றேன்...

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRJ5ErgcAGgsYEnZV1wY3Ng9M5MOqVI3DLd1Gm8xMhUR3iliUizYw
எதிலும் முழுமையான
அனுபவங்கள் இல்லாததால்
அவற்றின் ஊசல் மட்டுமே
ஊஞ்சல் ஆடுகிறது...
ஆனபோதும்
அக்கறையின் பச்சைக்கு
ஆசைப்படுபவள் நானல்ல....!!!

எழுதப்படும் எனது கவிதைகள்
வேண்டுமானால்
காலாவதியாகலாம்! - ஆனால்
ஒருபோதும் என்காதல்
காலாவதியாவதில்லை...!

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcR9lxp4K8ij_PqWWCPGuvZ1q53X6QucgAl52RiDQwWJ7PMi0IruRw
இதோ
இந்த அறையின்
நான்கு மூலைகளில்
ஒன்றில் நீ....
மற்றொன்றில் உன் காதல்
ஒரு மூலையில்
உனக்கான என் கவிதைகள்
மற்றொரு மூலையில்
உன் குரலின் எதிரொலி
பெரும்பான்மையானவை
உன்னாலேயே நிரப்பப்படுகின்றன....!!!



Wednesday, June 29, 2011

என்றும் உன்னவள்......

http://image.blingee.com/images18/content/output/000/000/000/73f/719939626_1508496.gif?4


விழிகளில் உற்சவம் நடத்தி விளையாடியவள்
விழிமுழுவதும் கடலாய் கோர்த்திருந்தேன்...
வார்த்தைகளற்ற வாக்கியங்களுடன்
மௌனம் மட்டுமே மொழியாக வியர்த்திருந்தேன்...

பகல் இரவு இல்லாத வாழ்க்கையை
உன்னுடன் பகிர்ந்து வாழ காத்திருந்தேன்...
இதயக் கூட்டிற்குள் உன்னை மட்டும்
இமயமாய் வைத்துப் பார்த்திருந்தேன்...

நினைவிழந்த நிலையிலும் _ என்
நிதானம் தவறாமல் உன்னை சரணடைந்தேன்...
காலங்கள் யாவும் உன் மடி தேடி
காதலாய் என் கண்ணியம் காத்திருந்தேன்...

தூணிலும் துரும்பிலும் இறைவனாம்!!!
உணர்வற்ற இடங்களில் அவன் மட்டுமே...என்
ஊணிலும் உயிரிலும் நீதானடா!!!
உணர்வும் உலகமும் நீ ஒருவன் மட்டுமே...

Monday, June 27, 2011

ஞாபகக் கீற்றுகள்

காலைத் தென்றலில்
பனித்துளியின் குளிர்ச்சியில் - உன்
ஞாபகக் கீற்றுகள் மென்மையாய்
என்னைச் சுற்றுகின்றன....
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRGyc7QT2m9sahhR5KZYPgHNwNfnhq8B4yzVegd1PjUk5_kf9l3
வாழ்க்கையின் தத்துவம் அவரவர்
வசதிக்கேற்ப மாறுகிறது!
உயிரை உரித்தெடுக்கும்
உன் ஞாபகப் போராட்டத்தில் - என்
உள்ளமும் உலர்ந்துதான் போகிறது!


சடுதியில் நீ உதிர்த்துச் செல்லும்
உன் உஷ்ணமிகு வார்த்தைகளை விட
உன் பேரமைதி கொடுமையானது!
உன் சொற்களின் கனத்தில் - இங்கு
எல்லாமே சுரமிழந்து கிடக்கின்றன!

எப்போதும் திறந்த விழிகளுக்குள்
வந்து போகும்
உன் பாராமுகத்தில் மௌனமாய்
என் முகம் தாழ்ந்து தவிக்கும்!
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcR2RsqmxQturIBlZySw-Wi2pjsBGZFhf_h_5Y8cwjt39eRhPceBPg
இலவசத்தின் உச்சத்தில்
எம் நாட்டு தலைவர்களுக்கு
நீயும் சளைத்தவனல்லடா....
உன்னால் விநியோகிக்கப்படும்
இலவச காயங்களில் - என்
இதயம் எப்போதும்
ஆறாத ரணங்களுடன்
ரிதமிசைக்கின்றன!


என்னிலிருந்து
விலகிச் செல்லும் உன்
ஊடலின் வேகம்
சில நேரங்களில்
மதம் பிடித்த யானையையும்
பின்னுக்குத் தள்ளுகிறது!

http://nitharsanam.net/wp-content/uploads/2007/04/IND.ele.jpg
என் ஒவ்வொரு காயத்தின்
ரகசியத்தின் ஜீவிதத்தில்
ஜீவனாய் நீ மட்டுமே!
என் காதலின் தாகத்தில்
துயரமே தூர்வார்க்கப் படுகின்றன!

ஆயினும்
உன்னால் நிரப்பப்படும்
என் விழிகளின் நீரினிலும்
உனக்கான காதல் நிறைந்திருக்கும்
உன் துதி பாடியே வழிந்திருக்கும்!

Tuesday, June 21, 2011

நீயும் வள்ளல்தானே...!

ஊர் உறங்கிய பின்னும்
உலா வரும் நிலவாக
உறங்காமல் உலா வருகின்றேன்
உன் உயர்ந்த நினைவுகளுடன்!

http://ts2.mm.bing.net/images/thumbnail.aspx?q=1030077352725&id=d80a75ca8104afd2bb2af57107bbed34
என் கனவிற்குள்
என் அனுமதியின்றி
உன்னால் மட்டுமே
உள்ளே நுழைய முடியும்!

இதோ இங்கு வீசும் காற்றுடனும்
பேச ஆரம்பித்துவிட்டேன்...
தோட்டத்து மரமும் தோழியாகி
யோசனை சொல்கின்றது!

இரவினில் தேம்பியழும்
பூனையின் அழுகுரலில்
எப்போதும் நடுங்கும் இதயம்
இப்போதெல்லாம் அதை
தடவிக் கொடுக்க தயாராகின்றது!

http://ts1.mm.bing.net/images/thumbnail.aspx?q=996704387972&id=7056ec1f50d2408087ec5ece02770fef
ஏதோ ஒன்றினால் இதயம்
பலமடையும் என்பதை
உன் வரவால் உணரமுடிகிறது!
இந்த உயிர்த்துடிப்பு இயங்குவதன்
நோக்கமும் உனக்கான ஆக்கம்தான்!

உனது நேசத்தின் நெருக்கத்தில்
அமைதியாகும் என் சோகங்கள்!
என் காதலின் பயணத்தில்
ஓய்வு என்பதே கிடையாது!

ஆதலால் அன்பே.....

கடையேழு வள்ளல்களின் கணக்கில்
ஒன்றை சேர்த்துக் கொள்கின்றேன்!
நான் இரவாமலேயே எனக்கு
இதயம் கொடுத்த நீயும் வள்ளல்தானே...!

http://ts2.mm.bing.net/images/thumbnail.aspx?q=957908266801&id=3e3bf0608889f7390baf960f3d954b53
இருப்பினும்
உன் இணக்கம் வேண்டிப் பெருகும்
தாபம் கரைக்க - இந்த
வெறும் நினைவுகள் மட்டும்
போதுமானதாயில்லை.....!!!

மருந்திடுவார் யாரோ?

இதோ
இந்த இருண்ட வானத்தின்
வாசற்படியில் வலுவிழந்து நிற்கின்றேன்...
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQkQ9C_fV0N2E-gJ2Sl4cpxyUd_mh5IZkoDLKBMO7WVeLuECXYH
எங்கே நான் விழுவது?
என் கரங்களின் ரேகையை
என் விதி அழித்துவிட்டது!

வாழ்க்கை என்னும் கடலில்
பயணிக்கும் போது
துடுப்புகளே தொலைந்து போனால்
தூண்டிலை வைத்து என்ன செய்வது?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7Y1SdCrRRg3YRxK0F7kmp7zc21C0RfYat2sVB3z_vqHJiihuCZV4uL2Ta9opMweIZomCqEHN5wlxCpcyPwJDEuxrinR0mdIGU_bH9zQj_mXTyKLhHpdDQIXa_dztlDDZxaYNL-BFwfQSB/s400/Row+Boat+and+River.png
ஏமாறுதலின் ஏகாதிபத்தியமே
என்னிடம்தான் உள்ளது...
இருந்தும்
சாயம் பூசிய வண்ணக் கோழிக்குஞ்சாய்
வலம் வருகின்றேன் வீழ்வதறிந்தும்...!!
http://ts3.mm.bing.net/images/thumbnail.aspx?q=1012895327994&id=f528d43307f314c5fc5a1799c31a1cdc
என்னைத் தொடர்ந்து வந்த
என் பாதங்கள்
இப்போது என் பயணிப்பை
தனித்து விட்டுச் செல்கின்றன....

எப்போதும் பார்த்துக் கொண்டிருந்த
பூச்செடி
இப்போதெல்லாம்
கள்ளி செடியாகவே தெரிகிறது!
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSECEMqtV4CogYp1ftPHIrl8v86JB0vKIcxTYrprCdyJr2Q_M2Oow
இதயம் முழுதும்
பாறையாகி விட்டதால்
விதைக்கும் விதைகளும்
வீரியமற்றே கிடக்கின்றன....

காலங்களை பிடித்திழுக்கும்
இந்த காயங்களில் மருந்திடுவார் யாரோ?
அந்தி சரிகின்ற போதெல்லாம்
என் புலம்பல்கள் புலம்பெயர
ஆரம்பிக்கின்றன....
http://i5.photobucket.com/albums/y175/nilavunanban/Love_Pain.jpg
விழிகள் விரிய விசாரிக்கின்றேன்
விருப்பத்தின் வாசலில் விளிக்கின்றேன்
விரையும் வினாடிகளிலும்
விதியோடு விளையாடுகின்றேன்...




Sunday, June 19, 2011

ஒற்றைச் சுவராய்......


http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcS7Giz7tJg7LYrPlUQ3_ZM843Gx4rmGeXRrZiqvABOQcjitqpcM
காதலின் ஊடலில்
செந்தனலாய் வார்த்தைகளை
நீ
வீசினாலும்
பொறுமையின் பாரத்தை
சுமத்தியதும் நீயல்லவா....


நீ
பயணிக்கும்போது
கடந்து செல்லும்
ஒற்றை மரத்தின்
நிழல்ல நான்...
உன்
பாதச் சுவடுகளின்
வழியே தொடரும்
உனக்கான ஈர நிழல் .....
http://www.desicomments.com/dc1/07/127160/127160.gif
என் நிலைப்பாட்டை
நீ
அறிகிறாயோ இல்லையோ
உன்
காலம் அறியும்!


விதி முடியும் முன்பு
மலரத் துடிக்கும்
என் கனவினை அள்ளி
உன் காலடியில் விரிக்கின்றேன்..
http://www.desicomments.com/dc1/07/127162/127162.gif
தூசு படிந்த இலையாய்
என்னுள் படிந்த
உன் நினைவுகளை
துடைத்து எடுக்க துணிந்ததில்லை
....


சுகத்தோடு வாழ்ந்த எனக்கு
இன்று
என் அகத்திற்கும் ஆபத்தாம்...
மன பாரம் ஏறி ஏறி
உடல் பாரம் குறைந்து விட்டது..

உன்னிடம் உரையாடமல் இருக்கும்
நேரங்களிலெல்லாம்
என் உணர்வுகளும் மெல்லமாய்
சாகடிக்கப் படுகின்றன...
http://www.desicomments.com/dc1/07/127164/127164.jpg
உறவைக் கொடுத்து
உயிரைப் பறிக்கும் வார்த்தைகளை
நீ கற்ற இடம்தான் எது...?

பகட்டாய் வாழ்ந்திருந்தவள்
இப்போது
பயணத்தின் வழியே பாதையோரத்தில்
இடிந்து கிடக்கும்
ஒற்றைச் சுவராய் நிற்கின்றேன் - உன்
நேசத்தின் மாறுதலுக்கப்புறம்...

http://www.tamilun.com/upload-files/raj/east/dsc00050_800x600-w600.jpg