Thursday, August 9, 2012

காவியக் காதல்.....

என் இதய வாசலை
பால்நிலா எட்டிப்பார்த்தது!
என் இமைகளுக்குள்
கனவுகள் தஞ்சம்புகுந்தன!
மௌனம் சூழ்ந்த
அந்த வேளையில் - உன்
மறுமொழியில் என்னை
ஆக்கிரமிக்கின்றாய்...
எப்பொழுதும் உன்
சொப்பனத்தில் வாழ்வதால்
மனதிற்குள் ஒன்றிரண்டு
சஞ்சலங்கள்!
பூங்காற்றாய் எனைச்சூழ்ந்து
அள்ளிக்கொள்ளும் - உன்
மெல்லிய உரசலில்
வெட்கங்கள் போர்வையாகி
எனை மூடுகின்றன...
என் பாடலின் கரு
நீயாக இருப்பதால் இணைந்து
தாளமிசைக்க விழிகள்
என்னவோ உன்னைத்தான்
விளிக்கின்றன....!
ஓடி வரும்
வசந்தத்தின் ஆசிபெற்று
மரங்களும், செடிகளும்
உயிர்ப்பெறுவது போல்
உன் வருகை கண்டு
என் வசந்தமும்
பூத்துக்குலுங்குகிறது...!
பயத்தைக் கொடுத்த
பகற்பொழுதுகளும்
இரக்கமற்ற
இரவுப்பொழுதுகளும்
என்னோடு
கைகுலுக்கி சமாதானமாகின்றன...!
என் சொற்களுக்கு சாணை
பிடித்துத் தந்தவன் நீ...!
தமிழின் காலமெல்லாம்
உன் காலமென்றால்
உன் காலமெல்லாம் - என்
காலமாகும்....!
கவிதைகளால் சந்தித்த
நமக்கு
கவிதையே சுவாசமானது!
உன் சுவாசத்தை நானும்
என் சுவாசத்தை நீயும்
இயக்குவதால்
நம் காதல்
இங்கு காவியமாகிறது...!

No comments: