Wednesday, August 8, 2012

ஒரு புறம் நானும் மறு புறம் - உன் தடம் படிந்த இடமும்...!!

அடைமழை ஓய்ந்த வேளை
பனி படிந்த அந்த நாளை
விரல்களால்
அழுத்தித் துடைக்கின்றேன்
மெல்லிய திரைகள் விலக
பிரகாசிக்கின்றாய்....
பெரும்பாலான பொழுதுகள்
ஒண்டியிருக்கிறோம்....
ஒரு புறம் நானும்
மறு புறம் - உன் தடம் படிந்த இடமும்...!!
உனக்காக நான்
தனிமையில் தோய்ந்தவளாய்
இங்கே காத்திருக்கின்றேன்
பழைய பஞ்சாங்களில்
புதிதாக நம்பிக்கை தருவதாய்
ஒரு வார்த்தையைத் தேடியபடி!
எப்போதும் என்னால்
உன் திசைக்கு வர முடியாது!
வெட்ட வெளி கூட
இங்கு சிறை தான்!
காற்றுக்கும் காவலுண்டு!
ஆனாலும்
கூரைக்கு மேலாக
மிதக்கும் பௌர்ணமிப் பொழுதில்
நான் மட்டும்
விழித்திருக்கலானேன்...!
காகம் கரைய
மற்றவைகளும் பின்பற்றின!
ஒளியைப் பிளந்து கொண்டு
ஒலியைத் தீட்டித் தீட்டி
விடியலைப் பெரிதாய் வரைய
மெல்லமாய்ப் பூத்தது சூரியனும்...!
விழிகளின் சந்திப்பில்
என் சாளரத்தை
திறந்து வைக்கின்றேன்...!
என்றேனும்
நீ வருவாய் என்ற
நம்பிக்கையில்.......

No comments: