Friday, August 31, 2012

எனக்கருள்வாயா தேவனே...... ??

என் எண்ணங்கள்
விண்ணிலிருந்து இறங்கி வரவில்லை
என் விதியின்
வேர்களிலிருந்து புறப்பட்டவை
நகர்ந்த பொழுதுகள்
சேமித்து வைத்திருக்கும்
சங்கடமான சங்கதிகளையும்
நடப்புப் பொழுதுகள்
கற்றுத்தரும் கணக்கற்ற பாடங்களையும்தான்
கிறுக்கல்களாக்கிக் கொண்டிருக்கிறேன்
நேற்றைய கடனை அடைக்க
இன்று கடன் வாங்கும்
பாமரனைப் போல்
நேற்றைய பிரச்சினை முடியாமலிருக்க
இன்று இன்னுமோர் பிரச்சினை..!
இதயத்தில் நெருப்பை வைத்துக்கொண்டு
கரங்களுக்குளிருக்கும் மலரை
காப்பாற்ற முயற்சிக்கின்றேன்
இதயத்து இருப்பினில் எல்லாம்
பற்றுகளே நிறைந்திருக்க
வரவுகளுக்கு வழியில்லாமல்
கணக்கும் அநாமத்தாய் நிற்கிறது!

http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/300302_404996502895542_715019747_n.jpg

செல்லரித்துப் போன நெஞ்சினுள்
புல்லரித்த கற்பனைகள்
பூந்தென்றலாய் புதுமலராய்
உன் நேசத்தின் வாசத்தினில்
இடறிவிழுந்தன வார்த்தைகள்!
உள்ளத்தினுள் உன்னோடு ஓடிக்கொண்டிருக்கும்
உரைநடைச் செய்திகளை
எழுத்தினில் வடிவமைக்கின்றேன்
எப்போதும் என்னை விட்டகலாத
என் பேனாவிற்கும், எண்ணத்திற்கும்
புது வலிமை வந்தது நீ வந்ததினாலே...!
எத்தனை நந்திகள் வந்து
வழியினில் படுத்திருந்தாலும்
பக்தருக்கருளும் பரமனாய்
எப்போதும் எனக்கருள்வாயா தேவனே...... ??



No comments: