Wednesday, August 8, 2012

காதலின் பூரிப்பில் கட்டுரை ஒன்று.....


ஏட்டிலே ஊர்ந்து செல்லும்
எழுதுகோல் எழுதுவதெல்லாம்
உன் ஞாபகப் பக்கங்களையே...

மழைக்கால மேகங்களின்
மங்கிய மாலை நேரத்தில்
மண் வாசனையாய்
யோசனைகள் உன்னைப்பற்றி...

அடம்பிடிக்கும் உன் நினைவுகளோடு
நீந்துகின்றேன் - உன்னில்
உயிர்த்தெழ உணர்வோடு அலைகின்றேன்

கட்டவிழ்ந்த மேகக்கூட்டங்களும்
மொட்டவிழ்ந்த மலர்களும்
பாடிடும் ராகங்கள் தென்றலாய்
எனைத் தீண்டிச் செல்கையில்

மழைச்சாரலின் வேகத்தோடு
கட்டுரை ஒன்று கட்டுகின்றேன்
காதலின் பூரிப்பில்!

முன்னுரையிலேயே
முனைப்போடு உனக்கு
முன்னுரிமை அளிக்க முயல்கின்றேன்

பொருளுரையில் உந்தன்
பெருமையைப் பார்க்கின்றேன்
மதிப்புரையில் மிளிரும் உன்னை
மன்றாடிச் சேர எண்ணுகின்றேன்

முடிவுரையில் நானும்
முடிந்தவரை எழுதுகின்றேன்
நிறைவில் எந்தன்
நினைவிழந்து நிற்கின்றேன்

சுருக்கினேன் என் சுகங்களை
விலக்கினேன் விருப்பங்களை
மாற்றங்கள் எதுவுமில்லை
மறக்கவும் முடியவில்லை...

No comments: