Thursday, August 16, 2012

பதியெனும் காதலில்.....


உதடுகள் ஊறும் அமிழ்தத்தில்
உயிர் வரைந்த ஓவியமாய்
ஊதக் காற்றில் மிதந்து வந்த
உன் பொன் தமிழில் கரைந்தேன்

எங்கிருந்தோ ஆசைகள்
எல்லையில்லாமல் எழுந்துவர
ஏகாந்த ஏக்கத்தில்
எண்ணமெல்லாம் மேலெழும்ப

ஐம்புலன்களும் அமைதியிழந்து
ஐயமின்றி உனைச்சேர
உயிர் மூச்சை உள்ளிழுத்து
உதடுகளால் மொழி பெயர்த்த

உன் காதலின் கவித்துவத்தை
என் இதழ்களில் சுவைக்கின்றேன்
தமிழுக்கும் மணமுண்டு என்பதை
உன் மன மொழியில் அறிகின்றேன்


இளந்தளிராய் இலை வடிவாய்
கிளைகளுடன் கொண்டாடினேன் - உன்
ஒளிச்சேர்க்கையின் புரிதலில்
என் உயிர்மூச்சை பெற்றிருந்தேன்

என் விழிச்சிவப்பினில்
கண்ட காதல் கனவுகளை
உன் இதழ்களின் தூரிகைகள்
நனவினில் எழுதத்தயாராகின்றன...

வேதம் ஓதிய உதடுகள்

காதல் கீதம் பாடும் என்பதை
காசினியறியும் போது
காதலி நானுமறியலானேன்...

விதியெனும் விளையாட்டை
விரித்திட வேண்டாமிங்கு
பதியெனும் காதல் செய்து
வாழ்ந்திடுவோமே....

இன்பமும் வேண்டாம் - உலகத்
துன்பமும் வேண்டாம்
அன்பெனும் மதுவினுள் மூழ்கி
அகநிறைந்திடுவோம் அன்பே...



 

No comments: