Thursday, August 30, 2012

என்னில் நீயடி....

வானத்து வீதியிலே
வானம்பாடியின் சங்கீத ஊர்வலம்
இதயத்து வீதியிலோ
இளையவனின் நினைவுகள் ஊர்வலமாய்
வெற்றிடங்களை மொத்தமாக
இரண்டும் இசையால் நிரப்புகின்றன
நேற்றைய இரவினில்
என் காதருகில் - நீ ஓதிய
காதலின் கவிராகம்
வேதமாய் நெஞ்சுக்குள் ரீங்காரமிடுகின்றன..!
"செல்லமே...!!
உன்
எண்ணத்தில்  விளைந்த முத்துக்களை
என்னோடு பகிர்ந்திடவே விளித்தேன்...
உன்னிதழ் வழியே  உதிர்ந்ததுவோ
உன்னுயிரோட்டம் - உணர்ந்ததும்
உறைந்து உருகலானேன்
களமிறங்கி களையெடுக்க வந்தவன்
கவி கேட்டு கரைகின்றேன்
ஏனடி வதைக்கின்றாய்...
இலக்கை அடைய நினைத்தவனை
இதயத்தினுள் அடைத்து விட்டாயே...
வீரியமாய் விளைந்திருந்தவனை - உன்னில்
பாரியின் முல்லையாய் படரச்செய்தாயே...
யாகம் செய்து எனை ஆட்கொண்டவளே
மோகம் கொன்று முத்தமிடுகின்றேன்
காதல் சொன்ன கனியிதழ்களை
என்னிதழ்களோடு சிறைபிடிக்கின்றேன்
தயக்கம் தவிர்த்து தமிழால் - என்
தாகம் தீர்த்த தமிழச்சியே....
என்னில் நீ எப்போதும் இருப்பாயடி"....!!
தேய்ந்துபோன இசைத்தட்டாய் - உன்
காதல் வேதங்கள் இன்னும் என்
இதயத்தினுள் இசைத்துக்கொண்டே.......
 
 
 

No comments: