Thursday, December 23, 2010

அன்பான அம்மாவே...

http://i.pbase.com/o4/30/52730/1/91859921.IQKYu39G.IMG_0137.JPG




"அம்மா" இந்த மூன்றெழுத்தில் - எனக்கு
மூச்சுக் கொடுத்த மூன்றாம் பிறையே...
உன் திருக்கல்யாணத்தில் - நீ
கலைமகளாய்த் தெரிந்தாயாம்!!
இப்பொழுதும் அப்படித்தானே இருக்கிறாய்!

"பாண்டிய மன்னன் முப்பெருங்கடலில்
மூழ்கித்தான் முத்தெடுத்தான், நான்
முழுகாமல் முத்தெடுத்தேன்" - என்று
என்னிடம் பாடுவாயே!! பாக்கியமானேனே...
முத்தின் பெருமை சிப்பியின் தியாகத்தால்
இது உலகறிந்த உண்மையம்மா...

கல்யாண நாளிலிருந்து கணவனிற்காக
வாழ்ந்து கண்ணியம் காத்தாய்....
கருவுற்ற நாளிலிருந்து மகனிற்காக
வாழ்ந்து பெண்ணியம் காத்தாய்...
உன் அவதாரம்தான் என்ன?

ஒரு சிறு உதிரமாய் உன்னுள் நான்
உதித்து உயிர்ப்பெற - நீ
மசக்கையில் பட்ட பாடெல்லாம்
பார்த்தவர்கள் சொல்லி அறிந்ததைவிட
உள்ளிருந்து உணர்ந்து உறைந்தேன்

பத்தியமிருந்து என்னை பத்திரப்படுத்தி
நித்திரையின்றி நித்தம் தவித்து
சத்தமின்றி தொட்டு தொட்டு
முத்தம் பதித்து பொக்கிஷமாய்
போற்றி பெருமையாய் சிலிர்ப்பாய்...

எனக்காக வாழ்க்கையில்
சோக சுமைகளை சுமந்து
உறவில் சிரித்த உயிரோவியமே...!

எத்தனை ரணகளங்கள் எதனை ஏமாற்றங்கள்
அத்தனையும் உன் அன்பான உன் நெஞ்சில்
எனக்காக ஏந்திய தீபச் சுடரே...!

எங்களின் சந்தோஷத்திற்கு பாலம் அமைத்து
உடலை வருத்தி; உயிரை வெறுத்து
உள்ளத்தினுள் ஊமையாய் அழுத உத்தமியே...!

அன்னையாய் வந்து அன்பால் வளர்த்து
ஆசிரியையாய் இருந்து அறிவால் போற்றி
அம்பிகையாய் நின்று ஆசியை தந்து
ஜணனம் கொடுத்து மரணம் பெற்ற
என் மாசில்லா மணிவிளக்கே...

இனியொரு ஜென்மம் வேண்டுமம்மா...
பிறப்பும் பெண்ணாய் இருந்திட வேண்டுமம்மா...
உன்னை என் கருவறையில் சுமந்திட வேண்டுமம்மா...!
அதற்கு உன் வரம் வேண்டுமம்மா...


3 comments:

k n vijaya kumar said...

ஒரு சிறு உதிரமாய் உன்னுள் நான்
உதித்து உயிர்ப்பெற - நீ
மசக்கையில் பட்ட பாடெல்லாம்
பார்த்தவர்கள் சொல்லி அறிந்ததைவிட
உள்ளிருந்து உணர்ந்து உறைந்தேன்

இனியொரு ஜென்மம் வேண்டுமம்மா...
பிறப்பும் பெண்ணாய் இருந்திட வேண்டுமம்மா...
உன்னை என் கருவறையில் சுமந்திட வேண்டுமம்மா...!
அதற்கு உன் வரம் வேண்டுமம்மா...

என்ன சொல்வது. மிகவும் நன்றாக உள்ளது என்பதை பல்லாயிரம் முறை கூறிக்கொள்கிறேன்.

பிரேமி said...

நன்றி நண்பரே....கவிதையுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்:-)

ஜீவன் சுப்பு said...

அழகு ...!