Thursday, September 20, 2012

நம் பயணம்.....


  
    நீ   
    ஒவ்வொருமுறையும்
    ஊருக்குப் பயணிக்கும்போதும்
    என்னோடு சேர்ந்து
    நம் தலையணையும்
    அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறது
    

    சுவடு படிந்த நிலையில்
    நீ அமர்ந்த இருக்கை
    தூசு படிந்த நிலையில்
    நீ உபயோகித்த கணிணி
    எண்ணெய் இருந்தும்
    ஏற்றப்படாத காமாட்சி விளக்கு
    ஏக்கத்தில் நான் - என
    அத்தனையும் ஒப்புவிக்கின்றன
    நீ ஊருக்குச் சென்றதை!
    
    வாசல் வழியே வந்து
    வசவோடு எட்டிப்பார்க்கும் கதிரவனும்
    முற்றத்துக் கூடத்தில் வந்து
    முனங்கியபடியே நகரும் நிலவும்
    மாலை நேரத்திலும் மலராமல்
    இதழ்களை அடக்கியிருக்கும் அல்லியும்
    உன் மேல் நான் கொண்ட காதலை
    நியாயப்படுத்தி - நீ
   இல்லாமலிருப்பதற்காக
    தர்ணா நடத்திப் பார்க்கின்றன!


     இரவு நேர
    பயணத்தின் போது
    நீ
    உரையாடும் அந்த
    கைபேசிக் காதல் மொழிகளை
    ஆராய அடுத்த அகராதியை
    நான்
    தேடிக்கொண்டிருப்பேன்
    விடியும்வரை விடாமல்
    நீ
    சேருமிடம் வந்தபின்புதான்
    நானும் உணர்வேன்
    உன்
    பயணம் என்னோடுதான் என்பதை...
    
    ஆன போதும்
    எத்தனை உறவுகள்
    எங்கெல்லாமோ பயணிக்கின்றனர்
    அத்தனைக்கும் கலங்காத மனசு
    உன் பயணத்தில் மட்டும்
    கொஞ்சம் ஆடித்தான் போகிறது!
    நீ
    பயணிக்கும் திசையெல்லாம்
    என்
    மனசும் உன்னோடு பயணிக்க
    நம்
    பயணத்தோடு காலமும் நமக்கு
    சுருதி சேர்த்து சுகமாக்குகின்றது...!!
    

No comments: