Saturday, September 15, 2012

அப்பாவிற்கு ஓர் இரங்கற்பா

கசப்பான நினைவுகளைக்
காலங்கள் கரைத்துவிடலாம்
ஆனால்
பாசத்தாலான நினைவுகளை
எப்படி மறப்பது?

நாழிகைகள் கரைவதில்
துயரங்கள் கரைய மறுக்கின்றன...
சோகநிகழ்வுகள் பொதிசுமந்த
பாரமாய் நெஞ்சில் நிறைந்துள்ளன...

எப்படியாவது ஏதாவது ஒருவிதத்தில்
அப்பாவின் நினைவுகள்
அழுத்தமாய் வந்து ஒட்டிக்கொள்கின்றன!

புகைப்படத்தில் மட்டுமல்ல எப்போதும்
நேரிலும் சிரித்திருக்கும் அப்பா
மரணத்தின் வாசலிலும் சிரித்திருந்ததை
மனம் மறக்க மறுக்கிறது..

கம்பீரமாய் மட்டுமல்ல மென்மையாய்
அழைக்கும்போதும்
அப்பாவின் குரல் ஓங்கியே இருக்கும்..

அப்பாவிற்கிருந்த மரியாதையை
வந்துசேர்ந்த எண்ணிலடங்கா
மலர் வளையங்கள் சொல்லியழுதன
அவர் வாழ்ந்த மாசற்ற வாழ்க்கையை...

மாலை வரை வந்து சேர்ந்த மாலைகளில்
அப்பாவின் நட்பின் பலமறிந்தோம்...
வந்திருந்தோர் மட்டும் கரையவில்லை
வானமும் கரைந்து அழுதது...

விருந்தோம்பலில் அப்பாவிற்கு நிகர் அப்பாவே!
அப்பாவின் இதயத்துடிப்பு ஒலியிழந்தாலும்
அவரின் கைக்கடிகாரம் ஒலியிழக்கவில்லை..!!

உரிமையானோருக்கு மட்டுமல்ல
உறவானோருக்கும் உயிரான அப்பா - இன்று
எல்லோர் உயிரையும்  உருகச்செய்து சென்று விட்டார்....

ஒவ்வொரு மேடைப்பேச்சுக்கும் முன்பும்
அப்பாவின் முன்புதான் அரங்கேற்றம் - இங்கு
அவர் மூச்சில்லாதபோது என் பேச்சும் மௌனமாய்...

எப்போதும் அப்பாவால் பூத்துக்குலுங்கிய
எங்களது நந்தவனம் - இன்று
பாலையாய் அலைமோதுகிறது...!!

என் எழுத்துக்களை நேசித்த
என் முதல் வாசகன் என் அப்பா - இன்று
யோசித்து எழுதினாலும் எழுத்துச்சிதறல்களில்
அப்பாவே ஐக்கியமாகின்றார்...

மரணத்தின் பிடியில் அப்பா பிடித்திருந்த
கட்டிலின் விளிம்புகளில் அவரது கைரேகைகள்!
தடவிப்பார்த்து தவிக்கையில் உள்ளிருந்த
உயிர் நழுவி விழுகிறது...

மீளாத்துயிலில் அப்பா சென்றுவிட்டு
ஆறாத்துயரத்தில் எம்மை ஆக்கிவிட்டார்
காலத்தின் எல்லையை கணக்கிட்டிருந்த
அப்பாவும் ஓர் தீர்க்கதரிசியே....

ஏனையோருக்கும் அப்பாவைப்
பிடித்திருந்ததால் என்னவோ
எமனிற்கும் பிடித்துவிட்டது....

வந்தது அப்பாவிற்கு இறப்பென்றால்
வந்திருப்பது எங்களுக்கு பேரிழப்பு
கடவுளிற்கும் கண்ணீர் வருமென்றால்
அது அப்பாவின் விதி முடிவால்...











No comments: