Saturday, September 1, 2012

என் இதய ஒசை கவிதையாய்...

கணநேரம்தான் வாழ்க்கை
அதற்குள்
காயங்கள் மட்டுமே ஆயிரம்
தினம் தினம்
சிலுவை சுமந்தாலும்
எனக்குள் நானே உயிர்தெழுந்து
பீனிக்ஸ் பறவையாகின்றேன்!
சுமைகள் தாங்கியே
சுகவீனமாகுவதால்
சிறிய இளைப்பாறலுக்கு
இடம் தேடுகின்றேன்....
எனக்கான பாகம் பிரிக்கப்படுகிறது
பாலையும், நெருப்புமாய்.....!!
சுண்ணாம்பிற்கும், வெண்ணெய்க்கும்
வேறுபாடு தெரியும்போது
நிசத்தின் வெளிச்சம்
வலியாய்க் கண்களைத் தாக்குகிறது!
 கண்ணீரை
ஊராருக்குக் காட்ட - நான்
முயற்சிப்பதில்லை!
அது
இதயத்தில் வடிவதை யாரும்
அறிந்து கொள்ள
ஆசைப்பட்டதுமில்லை!
கண்ணீரற்ற கண்களின்
வடுக்களை சாயம்பூசி
மறைத்து சிரித்திடுவேன்!
தேங்கி அழுவதைவிட
நகர்ந்து வாழ்வது நல்லதென
தீர்மானித்து திங்காளானேன்!
 வலி நிறைந்த நினைவுகள்
நீக்கமற நிறைந்திருந்தாலும்
சலனத்திற்கு இடமளிப்பதில்லை!
பறக்கும் அளவிற்கான
ஆகாயப் பரப்பைத் தீர்மானிக்கும்
ஓர் பறவையாய்....
வீசும் திசையைத் தானே நிர்ணயிக்கும்
ஓர் காற்றாய்....
இந்தப் பிரபஞ்சத்தில் வலம் வருவேன்!
சப்தமற்ற சலங்கையாய் - என்
மௌனம் ஒலிக்க
இசையை எழுப்பும் - என்
இதய ஓசை கவிதையாய்.......

No comments: