Thursday, April 19, 2012

தொடமுடியாத தூரத்தில் நீ .........

உன்
நினைவுகளால் நிரம்பிய
இந்த இடத்தை
சுற்றி சுற்றி பார்க்கின்றேன்
நடந்த நிகழ்வுகள்
முன்னும் பின்னும் சுழல
கவிதையாய் மிதக்கின்றேன்....
 
கவலைகளில் காயம் படிந்த
கனத்த இதயம் - உன்
விழிகள் வீசிய நேசத்தில்
அடுத்தவர்க்கு அழகு சேர்க்கும்
பட்டாம்பூச்சியாய் ஆனது!
கானகத்தினுள் ஊடுருவி
ஓசை தரும் காற்றைப்போல்
எனக்குள் ஊடுருவி
இசையாய் பரிணமிக்கின்றாய்...
எழுதிய எண்ணங்களை
வார்த்தைகளாக சேகரித்து - உன்
வாசிப்பிற்காக வைத்திருக்கின்றேன்
என்றாவது ஒரு நாள் வந்து
பார்வையால் மீட்டிச் செல்வாய்
என்ற நம்பிக்கையிலேயே.....
 
தொடமுடியாத தூரத்தில்
நீ இருந்தாலும்
இரு இமைகளுக்கான
இடைவெளியாக எண்ணியே
இணக்கமாகின்றேன்...
மோகத்தைக் கொல்ல முடியாமல்
தாகத்தைத் தீர்த்துக் கொள்ள
தேகத்தைக் கொல்லும்
மாந்தர்களுக்கு மத்தியில் - நீ
ஒரு புத்தனாய்
வலம் வருகின்றாய்....
 
எங்கு திரும்பினாலும்
நீயாகவே தெரிகின்றாய்....
யாருடன் பேசினாலும் எதிரில்
நீ பேசுவதாகவே நிற்கின்றாய்...
உலகமே மறந்து போய்
உன் நினைவுகளே
உலகமாய்த் தெரிகிறது....
என் பாரங்களை
உன்னிடம் இறக்கிவைக்கும்போது
தேவனின் கைகளில் தஞ்சமாகும்
ஆட்டுக்குட்டியாய் உன்னிடம்
அடைக்கலம் ஆகின்றேன்....

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

எங்கு திரும்பினாலும்
நீயாகவே தெரிகின்றாய்....
யாருடன் பேசினாலும் எதிரில்
நீ பேசுவதாகவே நிற்கின்றாய்

அருமையான வரிகள்.. பாராட்டுக்கள்..