Friday, May 8, 2020

எம் இல்லத்து பூந்தளிர்கள்

எம் இல்லத்து பூந்தளிர்கள்
********************************
உள்ளமொன்றும் புறமொன்றும்
பாராமல்
வெள்ளையுடை தரித்து வலம் வரும்
வெண் தேவதைகள்!
செவிலியர் என்றாலே சேதாரமானவள்
என்ற வார்த்தையை வெட்டியெறிந்த
எங்கள் தேசத்தின்
எல்லை அம்மன்கள்!
துயரோடு வாழ்ந்தாலும்
அந்நியர் உயிரோடு போராடும்
உயிரோவியக் காவியங்கள்!
பரமக்குடி மாநகரில்
ஆறு புஷ்பங்களாய் மலர்ந்த
எங்கள் இல்லத்தில் செவிலியராய் 
முப்பெருந்தேவியராய் நிற்கின்றனர் மூவர்!
பயணச்சேவை முடியவில்லை...
வாரிசுகளும் மருத்துவச்சியாய்... செவிலியராய்..
இவர்களின் இரத்த பந்தமாய்
இருப்பதில் பெருமையோடு
கர்வமும் கூடுதலாய்... 👍   

Tuesday, September 22, 2015

பிரிவின் வலி.......



இன்று ஒரு சிக்கல்
என் எழுதுகோல்
எழுதிப் பழகியதுண்டு
ஆனால்
அழுது பழகியதில்லை..

எண்ணக்கருவறையில்
உதித்து நின்ற
வார்த்தைக் கருக்களெல்லாம்
வலிமையிழந்து வலியோடு
கரைகின்றன....

விரலுக்கும் எழுதுகோலிற்கும்
இடையே இருந்த நெருக்கம்
உனக்கும் எனக்குமானது…
ஆனபோதும்

கைவிட்ட விரலை நினைத்து
எழுதுகோல் கலங்குகிறதா, - இல்லை
கண்டு கொள்ளாத
உன்னை நினைத்து கண்ணீர் சிந்துகிறதா
தெரியவில்லை…

”இருந்தும் இல்லாமலிரு” வள்ளலார்
வாசகம் கற்றவன் நீ…- உன்
வாசகியாய் வந்தவளை வாசிக்கத்
தவறிவிட்ட தமிழன் நீ…!!

பாட்டும் தொகையுமாய் படித்த தமிழை
என் செவியோடு சேர்த்தவன் நீ… - உன்
பாட்டும் கவியுமாய் இருந்தவளை
கண்ணாக காக்க மறந்த கவிஞன் நீ…

எங்கெல்லாமோ சுற்றி வந்து
கதை சொன்னவன் நீ… - உன்
கதையின் நாயகி நானே என்றவன்
சுபம் போட்டு சுழிக்காதவன் நீ…

நாளும் இரண்டுமாய் பேசி
‘நா’ நயத்தோடு வாழ்பவன் நீ… - என்
சுகமோ துக்கமோ நீயிருப்பதினால்
எதுவும் என்னை பாதிக்கவில்லை…

பிரிவின் ஆறு இலக்கணமும்
உன்னிடம் தோற்று நிற்கிறது - இது
இலக்கணம் மீறிய செயலானாலும்
உன் புன்னகையால் சோகம் துறந்தது…

அணைப்பதும் ஆளுமை செய்வதும்
உன் பேரன்பினால் மட்டுமே என்பதினால்
மறந்த தருணங்களும் உணர்ந்த பொழுதுகளும்
இங்கு மோட்சமடைகின்றன….

துளிப்பாக்கள்....





இணையாமல் காத்திருக்கின்றன
இமைகள் இரண்டும் - உன்
ஒற்றை முத்தத்தில்
இணைவதற்காய்....!

வெளுத்துப்போன வாழ்க்கை
எப்போதும் ஒப்பனையில்
விலைமாதர்கள்...!

சுடும் வெப்பத்திலும்
குளிர் அரங்கேறுகிறது
அலைபேசியில் நீ...!

நாட்குறிப்பின் இடையில்
நீ கொடுத்த மயிலிறகு!
இனவிருத்தி செய்யாத
இறகுகளுக்கிடையே - உன்
நினைவுகள் விருத்தியாய்....!!

பொக்கிச நினைவுகள்....



            
                 


இதயச்சுமைகளை
பேனா முனையில்
இறக்கி வைக்கும்போதெல்லாம்
எதிரே வந்து விடுகின்றாய்...

உன்னால்
இரணமான இதயத்தை
ஆற்ற ஆயத்தமாகி விடுகின்றாய்...

என் தவிப்பும் தவமும்
உணர்ந்த நீ வரைகின்றாய்
எனக்காய் ஓர்
எதிர்க்கவிதை...!

முறிந்து கிடந்த சிறகுகள்
மீண்டும் உயிர்ப்பெற
யார் சொன்னாலும்
கேட்காத பெண் மனம்
நீ இரந்தால் மட்டும்
இறவாமல் பச்சையாகிறது...

எப்போதும் என் இதயக்கூட்டினுள்
தென்றலாய் உன் நினைவுகள்
தீண்டித் தீண்டி இளைப்பாருகின்றன…

மடிப்புச்சேலையின் நூலோடும்
துடிக்கும் இதயத்தின் நரம்போடும்
உன் தீண்டல்கள் பூபாளமிசைக்கின்றன…

என் ஞாபகச்சிறகுகள் எங்கும்
உன் நேசத்தின் வண்ணங்கள்
பூக்களாய் மலர்ந்து சிரிக்கின்றன….

வேரில் ஈரமிருந்தால்
விதைக்கு சோரமில்லை – உன்
இதயத்தினுள் ஈரமிருந்தால்
என் விழிக்கு ரோகமில்லை...

ஆதலால்தான் - அன்பே
புரிந்த உறவினுள்
புதைந்து கிடக்கிறது – உன்
பொக்கிச நினைவுகள் புதையலாய்…

நீயற்ற நிகழ்காலம்...




பனி பொழியும் குளிர் காலத்தில்
பார்வை மறைத்துப் போகிறது

நீயற்ற நிகழ்காலம்...

உன் அருகாமையற்ற நேரத்தை
செலவிடுதலின் தாக்கத்தை
வீட்டிலிருக்கும் சோடிப்புறாக்கள்
சொல்லி சொல்லி கதைக்கின்றன...


கடந்த காலக் காதலின் கவித்துவத்தை
கண்ணிற்குள் கொண்டுவரும் போதெல்லாம்
தடுமாறும் என் நடமாட்டத்தை
கடவுள் மட்டுமே கண்டறிவார்...


உன் வசனங்கள் நிறைந்த பேச்சாற்றலை
தனித்திருக்கும் போதெல்லாம்
உள்வாங்கிக் கொள்கின்றேன்...


நீ என் அருகிலிருந்த
அந்த நோன்பு நாட்களாகட்டும் - என்
கரம் பிடித்து கோயிலை
வலம் வந்த பிரகாரமாகட்டும்
இன்னும் நினைவில் நீண்டநிழலாய்
நின்று கொண்டுதானிருக்கிறது...


அப்போதிருந்த உனது புன்னகையை
இப்போது காணவில்லை தோழா...!
உன் பொருட்டு ஒவ்வொரு நாளும்
ஒரு பொய்யைச் சொல்லி கடத்துகிறேன்...


ஆடை மாற்றும் நேரத்தில்
காதலை மாற்றிக் கொள்ளும்
பாதகம் நானறியேன்...


என்னையறிந்த நீயுமிதை அறிவாய்...
ஆன போதும்
ஏனிந்த மௌனம்....?

Saturday, November 30, 2013

உன்னைத் தவிர்ப்பதில்லை.....




எழுத்துக்களால் நடனம்புரியும்
என் வார்த்தைகளுக்கிடையில்
உன் மௌனமொழி கண்டு
முடங்கித்தான் போனேன்...

தினமும் ஒருமுறையாவது
உன் விழிகள் என்னை
விசாரிக்காமல் போனால்
என் விதியை விமர்சிக்கின்றேன்...

இந்த இதய இயந்திரம்
உன்னால் மட்டும் இயக்கப்படுவதால்
என் மனக்குதிரையும் உன் முன்னே
மண்டியிட்டுக் கொள்கிறது...!

எப்போதும் உன் நினைவுச் சுவடுகளை
சுமந்து கொண்டிருப்பதால்
தப்பாமல் ஒலிக்கும் இதயமும்
உன் பெயரையே உச்சரித்து உயிர்தருகிறது!

ஆனாலும் எதிர்பாராத தருணங்களில்
எதிர்பாராமல் எது நடந்தாலும் - ஒருபோதும்
காகிதப்பூவிற்கு நீர்வார்த்து
மூலிகைச்செடியை மிதிப்பதில்லை அன்பே...

Friday, May 3, 2013

நீரூறும் கண்கள்....

இதயச் சுமைகளை
இறக்கி வைத்து இளைப்பாற
இன்னுமோர் இடம்
கிடைத்தபாடில்லை!

வாடிக்கொண்டே வளரும்
வாழ்க்கையில்
வசந்தத்தின் பக்கம்
அசதிக்குக்கூட அருகில்
வந்தபாடில்லை!

கனவுகளெல்லாம்
உணவுகளோடு செரிமாணமாக
ஆசைகளெல்லாம்  நிராசைகளாய்
நெஞ்சுக்குள் புதைந்து கிடப்பதை யாரும்
அறிந்தபாடில்லை!

தண்ணீருக்காய் தவமிருக்கும்
கற்றாழைச் செடியைப்போல்
அன்பிற்காய் தவமிருந்து
தரிசு நிலமாய்க் கிடப்பதை ஒருவரும்
உணர்ந்தபாடில்லை!

நெஞ்சில் தூக்கிச் சுமந்த துயரங்கள்
நெருஞ்சி முள்ளாய் நெருடுகையில்
நீரூறும் கண்கள் கண்ணீரில்
கரையாமலிருக்கட்டும்..!
இருதயமோ உடைந்து
போகாமலிருக்கட்டும்...!!





 

நீ மட்டும்தானடி.....


ஏனடி பெண்ணே..!

உனக்கும் எனக்குமான
நெருக்கத்தில் என்ன உரசல்?
இடைவெளியற்ற இடத்தில் ஒரு
குழப்பம் ஏற்படுகிறது கண்ணே...!

எப்படியோ... உள்ளிற்குள்
உருண்டு திரண்டு ஏதோ ஒன்று
நம்மை இணைத்து வைக்கிறது
இருந்தும் நெருங்க மறுக்கின்றாய்..

என் இடப்பக்கத்திற்குரியவளே...
அக்கம் பக்கம் ஆனவளே..
உன் நினைவுச் சிதறல்களுடனேயே
இடவலமெங்கும் நகர்வலம் போகின்றேன்!

வலுவான என் காதலில் வாழ்பவளே ..
என் எண்ணங்களுக்குள் விழுந்தவளே..
வண்ணங்கள் கொண்ட வாழ்க்கையில்
பிணக்கங்கள் வேண்டாமடி சகியே...!

அன்னமிடும் வேல்விழியே...
ஆலம் விழுதுகளாய் - உன்
ஞாபகங்கள் ஓயாமல் தேயாமல்
ஓங்கியே நிற்கிறது கிளியே...!

அரும்பினிலே முதிர்ந்தவளே..!
அமுதத்தினிலே நிறைந்தவளே..
கடன்பட்டவனானேனடி - உன்
காதலின் வலிமையிலே...

என் காலக்கடலோடு கலந்தவளே...!
மனம், உடம்பு, நேரத்தின் மீது
ஆதிக்கம் செலுத்திய தமிழச்சியே!
என்னோடு எப்போதும் நீ மட்டும்தானடி..!!

மங்கைவுடுங் கண்ணீரய்யா...!

மண்ணுக்கு உள்ளார
மழைத்தண்ணீ போல் போகுதய்யா
மழைத்தண்ணீ இல்லீங்கய்யா - இந்த
மங்கைவுடுங் கண்ணீரய்யா...!
கல்லரிசி மாலக்கட்டி
கழுத்துக்கொரு குஞ்சங்கட்டி
கழுத்தழகு பாக்காம - என்ன
கனிஞ்சியழ வச்சீகளே...!
நெல்லரிசி மாலக்கட்டி
நெருங்க சரந்தொடுத்து
நெல்லழகு பாக்காம - என்ன
நெனச்சியழ வச்சீகளே...!
சிண்டுலேயும் அரும்பெடுத்து
சில பூசை செய்யப் போனேன்
படியில அரும்பெடுத்து - நானும்
பாத பூசை செய்யப்போனேன்...!
பூசைக்கு பூத்த பூவை
பொறிக்கத்தான் போகயிலே
பூ நாகம் தீண்டுச்சய்யா - நானும்
பூ நாராய்ப் போனேனய்யா...!

செப்புத்தோண்டி கண்டெடுத்து
செவுந்திக்கே தண்ணீ  மொண்டேன்
செப்புத்தோண்டி ரெண்டொடஞ்சா
செவுந்திக்கே சேதந்தானே...!
பரியம் போட சாமரியில வந்தவர
எரிவரியன் தீண்டிச்சாக
அரியனோட பரிவட்டம் இறங்கிப்போச்சு - என்
மதியும்தான் மரிச்சுப்போச்சு...!

அறுகரிசியோட வந்த மக்க
பொறியரிசித் தூவி நிற்க
தூவானமும் தொடங்கிருச்சு
சுத்தியுள்ளவுக கண்ணுக்குள்ள...!



Saturday, January 5, 2013

காதல் கீதம்....


முகில் கண்டு நடமாடும்
மயில் போல - உன்
விழி கண்டு மலராடும்
என் மென்மை....

இருளோடு இணைந்தாடும்
மதி போல - உன்
அருளோடு வழிந்தோடும்
என் கண்கள்...

ஒளியோடு சுழன்றாடும்
கதிர் போல - உன்
ஒலியோடு சதிராடும்
என் சலங்கை...

மழையோடு நனைந்தாடும்
நிலம் போல - உன்
இழையோடு நுழைந்தாடும்
என் தேகம்...

பனியோடு நிறைந்தாடும்
இலை போல - உன்
கவியோடு மலர்ந்தாடும்
என் சோலை...

பொருளோடு கலந்தாடும்
கவி போல - உன்
கருவோடு உறவாடும்
என் பெண்மை....

தெரியவில்லை.....

பாதங்கள் நனைய
இறங்கும் வரை தெரியவில்லை
பாசியின் வலிமை

கரங்கள் நகர்ந்து
தொடும் வரை தெரியவில்லை
நெருப்பின் தன்மை

கண்கள் பனிக்க
காணும் வரை தெரியவில்லை
காட்சிகளின் பொய்மை

அலைகள் அசைய
ஆடும் வரை தெரியவில்லை
ஆழத்தின் ஆளுமை

பார்வைகள் ஒளிர
பழகிய வரை தெரியவில்லை
இருதயம் உடைவதை

ஒரு முகம் காண
ரசிக்கும் வரை தெரியவில்லை
பன்முகச் சாயலை

நம்பிக்கை சிதைய
நெஞ்சு வெடிக்கும் வரை தெரியவில்லை
துரோகத்தின் வன்மை.

Saturday, October 13, 2012

காதலின் சிதை.....

தனிமையின் தாழ்வாரத்தில்
உலவுகிறபோதெல்லாம் - என்
உணர்வுகளை இரணமாக்கிய
அந்த ஆனந்த நாயகனை
நினைக்காமலிருக்க முடியவில்லை!
ஆன்மாவைக் காயப்படுத்திவிட்டு
அவசரமாய்ப் பிரிவதில்
அவனிற்கு நிகர் அவனே....
 எண்ணங்களின் நினைவுக்கூட்டிற்குள்
கைகூடாத கனவுகளே கருமையாய்
வியாபித்திருப்பதால்
காலமரத்தில் கண்டவையெல்லாம்
இலையுதிர்க்காலங்களே...! - அவனால்
ஒவ்வொரு தாக்குதலிலும்
ஏற்பட்ட காயங்களை அடுத்தவர்
அறியாமல் அடைகாத்து வருகின்றேன்...!

முற்றிய கதிர்களின் சுமையைத் தாங்காத
நெற்பயிரின் தலை சாய்ந்து நிற்பதுபோல்
அவனாலான சோகங்களின் கனம் தாங்காமல்
சோர்ந்தே சுயமிழக்கின்றேன்...
உள்ளுறுத்தும் ஊமைக்காயங்களை
திரைபோட்டு மறைத்து சிரித்திட
உதடுகளில் புன்னகையின் ஊர்வலத்தை
வீரியமாய் நடத்தி வருகிறேன்...

என்னவனிற்கு மண்ணால் செய்த பொம்மையும்
உணர்ச்சிகளான பெண்மையும் ஒன்றே...
காலம் முழுவதும் உன்னோடு
நானிருப்பேனென்று சுகராகமாய்
வார்த்தை வரம் வழங்கியவன் - இன்று
இடம் மாறி நிறம் மாறிப் போனான்..!
காதல் என்னவனிற்கு கதையானது
எனக்கு அதுவே சிதையானது....!!

Friday, September 28, 2012

அன்பெனும் வரம்....

இங்கு யாவரும்
இடம் பெயர மட்டுமே
பொழுதுகள் புலர்கின்றன!
இயற்கையை ரசிக்க இங்கு
இமைகளுக்கு நேரமில்லை!
இதயம் கூட இயந்திரமாய்
இயங்குவதால் பயத்தோடே
வாழ்க்கையும் பயணமாகிறது...
வானத்து ஓவியங்களை ரசிக்க
நாட்காட்டியில் நாள் பார்க்கபடுகிறது...
தாயின் மடிதேடும் குழந்தைக்கும்
குறிக்கப்படுகிறது ஞாயிற்றுக்கிழமை!
வாரநாட்களில் அவர்கள் வளர்வதற்கு
விலை பேசப்படுகிறார்கள்....

இருவர் ஒருவராகும்
இரவு உறவும் இறுகிப்போக
இதய உறவுகளில் கருமை படர்கிறது...
விரல் அழுக்கை அகற்ற
நகத்தை வெட்டி எறிவதுபோல்
விவாகப் பிணைப்புகள்
எப்போது வேண்டுமானாலும்
வெட்டி எறியப்படுகின்றது..
கூட்டுக் குடும்பங்கள்
ஏட்டுச்சுரைக்காயாய்த் தெரிவதால்
பண்பாடுகள் அனைத்தும்
மண்ணிற்குள் புதைந்து கிடக்கிறது...
குறை கூறுவதே இங்கு
நிறையாய் ஊறிக்கிடக்கிறது...
அவசியத் தேவைக்கு மட்டுமே
அன்பு அலைமோதுகிறது...
காட்சிகள் எல்லாம் பிழையாய்த் தெரிவதால்
பட்சிகள் கூட இங்கு பாம்பாய்த் தெரிகின்றது...
உருவாகும் உயிர்களனைத்தும்
உருகித்தவமிருப்பதோ
அன்பெனும் வரத்தைப் பெறுதற்கே...

Thursday, September 20, 2012

நம் பயணம்.....


  
    நீ   
    ஒவ்வொருமுறையும்
    ஊருக்குப் பயணிக்கும்போதும்
    என்னோடு சேர்ந்து
    நம் தலையணையும்
    அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறது
    

    சுவடு படிந்த நிலையில்
    நீ அமர்ந்த இருக்கை
    தூசு படிந்த நிலையில்
    நீ உபயோகித்த கணிணி
    எண்ணெய் இருந்தும்
    ஏற்றப்படாத காமாட்சி விளக்கு
    ஏக்கத்தில் நான் - என
    அத்தனையும் ஒப்புவிக்கின்றன
    நீ ஊருக்குச் சென்றதை!
    
    வாசல் வழியே வந்து
    வசவோடு எட்டிப்பார்க்கும் கதிரவனும்
    முற்றத்துக் கூடத்தில் வந்து
    முனங்கியபடியே நகரும் நிலவும்
    மாலை நேரத்திலும் மலராமல்
    இதழ்களை அடக்கியிருக்கும் அல்லியும்
    உன் மேல் நான் கொண்ட காதலை
    நியாயப்படுத்தி - நீ
   இல்லாமலிருப்பதற்காக
    தர்ணா நடத்திப் பார்க்கின்றன!


     இரவு நேர
    பயணத்தின் போது
    நீ
    உரையாடும் அந்த
    கைபேசிக் காதல் மொழிகளை
    ஆராய அடுத்த அகராதியை
    நான்
    தேடிக்கொண்டிருப்பேன்
    விடியும்வரை விடாமல்
    நீ
    சேருமிடம் வந்தபின்புதான்
    நானும் உணர்வேன்
    உன்
    பயணம் என்னோடுதான் என்பதை...
    
    ஆன போதும்
    எத்தனை உறவுகள்
    எங்கெல்லாமோ பயணிக்கின்றனர்
    அத்தனைக்கும் கலங்காத மனசு
    உன் பயணத்தில் மட்டும்
    கொஞ்சம் ஆடித்தான் போகிறது!
    நீ
    பயணிக்கும் திசையெல்லாம்
    என்
    மனசும் உன்னோடு பயணிக்க
    நம்
    பயணத்தோடு காலமும் நமக்கு
    சுருதி சேர்த்து சுகமாக்குகின்றது...!!
    

Saturday, September 15, 2012

அப்பாவிற்கு ஓர் இரங்கற்பா

கசப்பான நினைவுகளைக்
காலங்கள் கரைத்துவிடலாம்
ஆனால்
பாசத்தாலான நினைவுகளை
எப்படி மறப்பது?

நாழிகைகள் கரைவதில்
துயரங்கள் கரைய மறுக்கின்றன...
சோகநிகழ்வுகள் பொதிசுமந்த
பாரமாய் நெஞ்சில் நிறைந்துள்ளன...

எப்படியாவது ஏதாவது ஒருவிதத்தில்
அப்பாவின் நினைவுகள்
அழுத்தமாய் வந்து ஒட்டிக்கொள்கின்றன!

புகைப்படத்தில் மட்டுமல்ல எப்போதும்
நேரிலும் சிரித்திருக்கும் அப்பா
மரணத்தின் வாசலிலும் சிரித்திருந்ததை
மனம் மறக்க மறுக்கிறது..

கம்பீரமாய் மட்டுமல்ல மென்மையாய்
அழைக்கும்போதும்
அப்பாவின் குரல் ஓங்கியே இருக்கும்..

அப்பாவிற்கிருந்த மரியாதையை
வந்துசேர்ந்த எண்ணிலடங்கா
மலர் வளையங்கள் சொல்லியழுதன
அவர் வாழ்ந்த மாசற்ற வாழ்க்கையை...

மாலை வரை வந்து சேர்ந்த மாலைகளில்
அப்பாவின் நட்பின் பலமறிந்தோம்...
வந்திருந்தோர் மட்டும் கரையவில்லை
வானமும் கரைந்து அழுதது...

விருந்தோம்பலில் அப்பாவிற்கு நிகர் அப்பாவே!
அப்பாவின் இதயத்துடிப்பு ஒலியிழந்தாலும்
அவரின் கைக்கடிகாரம் ஒலியிழக்கவில்லை..!!

உரிமையானோருக்கு மட்டுமல்ல
உறவானோருக்கும் உயிரான அப்பா - இன்று
எல்லோர் உயிரையும்  உருகச்செய்து சென்று விட்டார்....

ஒவ்வொரு மேடைப்பேச்சுக்கும் முன்பும்
அப்பாவின் முன்புதான் அரங்கேற்றம் - இங்கு
அவர் மூச்சில்லாதபோது என் பேச்சும் மௌனமாய்...

எப்போதும் அப்பாவால் பூத்துக்குலுங்கிய
எங்களது நந்தவனம் - இன்று
பாலையாய் அலைமோதுகிறது...!!

என் எழுத்துக்களை நேசித்த
என் முதல் வாசகன் என் அப்பா - இன்று
யோசித்து எழுதினாலும் எழுத்துச்சிதறல்களில்
அப்பாவே ஐக்கியமாகின்றார்...

மரணத்தின் பிடியில் அப்பா பிடித்திருந்த
கட்டிலின் விளிம்புகளில் அவரது கைரேகைகள்!
தடவிப்பார்த்து தவிக்கையில் உள்ளிருந்த
உயிர் நழுவி விழுகிறது...

மீளாத்துயிலில் அப்பா சென்றுவிட்டு
ஆறாத்துயரத்தில் எம்மை ஆக்கிவிட்டார்
காலத்தின் எல்லையை கணக்கிட்டிருந்த
அப்பாவும் ஓர் தீர்க்கதரிசியே....

ஏனையோருக்கும் அப்பாவைப்
பிடித்திருந்ததால் என்னவோ
எமனிற்கும் பிடித்துவிட்டது....

வந்தது அப்பாவிற்கு இறப்பென்றால்
வந்திருப்பது எங்களுக்கு பேரிழப்பு
கடவுளிற்கும் கண்ணீர் வருமென்றால்
அது அப்பாவின் விதி முடிவால்...











Saturday, September 1, 2012

என் இதய ஒசை கவிதையாய்...

கணநேரம்தான் வாழ்க்கை
அதற்குள்
காயங்கள் மட்டுமே ஆயிரம்
தினம் தினம்
சிலுவை சுமந்தாலும்
எனக்குள் நானே உயிர்தெழுந்து
பீனிக்ஸ் பறவையாகின்றேன்!
சுமைகள் தாங்கியே
சுகவீனமாகுவதால்
சிறிய இளைப்பாறலுக்கு
இடம் தேடுகின்றேன்....
எனக்கான பாகம் பிரிக்கப்படுகிறது
பாலையும், நெருப்புமாய்.....!!
சுண்ணாம்பிற்கும், வெண்ணெய்க்கும்
வேறுபாடு தெரியும்போது
நிசத்தின் வெளிச்சம்
வலியாய்க் கண்களைத் தாக்குகிறது!
 கண்ணீரை
ஊராருக்குக் காட்ட - நான்
முயற்சிப்பதில்லை!
அது
இதயத்தில் வடிவதை யாரும்
அறிந்து கொள்ள
ஆசைப்பட்டதுமில்லை!
கண்ணீரற்ற கண்களின்
வடுக்களை சாயம்பூசி
மறைத்து சிரித்திடுவேன்!
தேங்கி அழுவதைவிட
நகர்ந்து வாழ்வது நல்லதென
தீர்மானித்து திங்காளானேன்!
 வலி நிறைந்த நினைவுகள்
நீக்கமற நிறைந்திருந்தாலும்
சலனத்திற்கு இடமளிப்பதில்லை!
பறக்கும் அளவிற்கான
ஆகாயப் பரப்பைத் தீர்மானிக்கும்
ஓர் பறவையாய்....
வீசும் திசையைத் தானே நிர்ணயிக்கும்
ஓர் காற்றாய்....
இந்தப் பிரபஞ்சத்தில் வலம் வருவேன்!
சப்தமற்ற சலங்கையாய் - என்
மௌனம் ஒலிக்க
இசையை எழுப்பும் - என்
இதய ஓசை கவிதையாய்.......

Friday, August 31, 2012

முத்துச்சரமும் நானாவேன்...!

பொட்டுமேலே பொட்டுவச்சு
பொட்டலிலே போறசாமி
பொட்டுவச்சு எனை கரைசேர்க்க-உன்
பொட்டுருகத் தோணலையா...

ஆலமரக்கிளையினிலே
ஊஞ்சல் கட்டி ஆடயிலே
உம் ஓதும் குரல் கேட்டு
உண்மையுடன் காதலானேன்...
அத்துவானக் காட்டுக்குள்ளே
ஆயர் குழல் ஊதையிலே
சாடை சொல்லி ஊதினாலும்
சாமத்திலே நான் வருவேன்...

படுத்தால் பலநினைவு

பாயெல்லாம் கண்ணீரு!
உண்டாலும் உறக்கமில்லை
துவண்டாலும் தூக்கமில்லை...!
சேர்ந்திருந்தோம் சேர்ந்திருந்தோம்
செடியிலிட்டப் பூப்போல.....
செடியறுந்து பூ உதிர்ந்தா
சேருவது எப்போது?

கூடுனமே கூடுனமே-நாம்

கூண்டு வண்டிக் காளைபோல!
ஆகாத காலம் வந்து-நாம்
ஆளுக்கொரு சீமையானோமே...!
பட்சத்தோடு பயமிருக்கு
பறக்கச் சிறகிருக்கு!
எண்ணமிருக்கு-நம்
எழுத்துவிதி எப்படியோ?

மண்ணெதிரி, மரமெதிரி

மாந்தரெல்லாம் என்னெதிரி
புல்லும் எதிரியல்லோ!
பூலோகத்தில் ஏன் பிறந்தேன்?
நன்றாயிருந்தோம்
நாள்தோரும் சிரித்திருந்தோம்
ஊருபட்ட கண்ணாலே
தனிச்சுத்தான் தவிக்கிறோமே.....

உணர்வுக்கும், ஆசைக்கும்

விதைபோட்டு நின்றோமே....
விளைந்ததை விழுதாக்க
வழியமைத்து வாழ்வோமே...

அத்திமரம் நானாவேன்

அத்தனையும் தேனாவேன்
நத்திவரும் மச்சானுக்கு
முத்துச்சரமும் நானாவேன்...!

நான்.....

விளக்கைத் தேடி வந்து
விதியை முடித்துக் கொள்ளும்
விட்டில் பூச்சியல்ல நான்...!

வசந்தத்தைத் தேடி வந்து


வலைக்குள் சிக்கிக் கொள்ளும்
வண்ணத்துப் பூச்சியல்ல நான்...!

வருணத்தைத் தேடி வந்து

சிறார்களிடம் சிக்கித் தவிக்கும்
தும்பியுமல்ல நான்...!

மண்புழுவைத் தேடி வந்து

தூண்டிலில் சிக்கிக்கொள்ளும்
சிறு கெளிறுமல்ல நான்...!

அளவில்லா ஆசைக்கு
அடிமைப்பட்டு ஆனந்தக்கூத்தாடும்
அற்ப அரிவையல்ல நான்...!

அயோத்தியோ அசோகவனமோ

அன்பின் வலியோன் அகத்தினில்
நீங்காமல் நிறைந்திருக்கும்போது

சிகரமே சில்லென்று கீழிறங்கினாலும்

சீண்டிப்பார்க்காத சீதரனின்
பத்தினி சீதை நான்...!

கோட்டைத் தாண்டினாலும்

கோடகம் மீறாத கொற்றவனின்
கொற்றவை கோதை நான்...!

எத்தனை இன்னல்கள் வந்தாலும்

எண்ணங்களை மாற்றாமல்
என்னவனின் நினைவோடு
வாழ்ந்து கிடக்கும் வாழ்வரசி நான்....!!

எனக்கருள்வாயா தேவனே...... ??

என் எண்ணங்கள்
விண்ணிலிருந்து இறங்கி வரவில்லை
என் விதியின்
வேர்களிலிருந்து புறப்பட்டவை
நகர்ந்த பொழுதுகள்
சேமித்து வைத்திருக்கும்
சங்கடமான சங்கதிகளையும்
நடப்புப் பொழுதுகள்
கற்றுத்தரும் கணக்கற்ற பாடங்களையும்தான்
கிறுக்கல்களாக்கிக் கொண்டிருக்கிறேன்
நேற்றைய கடனை அடைக்க
இன்று கடன் வாங்கும்
பாமரனைப் போல்
நேற்றைய பிரச்சினை முடியாமலிருக்க
இன்று இன்னுமோர் பிரச்சினை..!
இதயத்தில் நெருப்பை வைத்துக்கொண்டு
கரங்களுக்குளிருக்கும் மலரை
காப்பாற்ற முயற்சிக்கின்றேன்
இதயத்து இருப்பினில் எல்லாம்
பற்றுகளே நிறைந்திருக்க
வரவுகளுக்கு வழியில்லாமல்
கணக்கும் அநாமத்தாய் நிற்கிறது!

http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/300302_404996502895542_715019747_n.jpg

செல்லரித்துப் போன நெஞ்சினுள்
புல்லரித்த கற்பனைகள்
பூந்தென்றலாய் புதுமலராய்
உன் நேசத்தின் வாசத்தினில்
இடறிவிழுந்தன வார்த்தைகள்!
உள்ளத்தினுள் உன்னோடு ஓடிக்கொண்டிருக்கும்
உரைநடைச் செய்திகளை
எழுத்தினில் வடிவமைக்கின்றேன்
எப்போதும் என்னை விட்டகலாத
என் பேனாவிற்கும், எண்ணத்திற்கும்
புது வலிமை வந்தது நீ வந்ததினாலே...!
எத்தனை நந்திகள் வந்து
வழியினில் படுத்திருந்தாலும்
பக்தருக்கருளும் பரமனாய்
எப்போதும் எனக்கருள்வாயா தேவனே...... ??



Thursday, August 30, 2012

திரவப்பொருளாய் நான்.....


திருமணச் சந்தையிலே - நான்
நறுமணப் பொருளானேன்...
தினந்தோறும் வரன் கொடுமையிலே - நான்
திரவப் பொருளானேன்..
 
கொடுத்த வாக்குறுதியில்

கடுகளவு தங்கம் குறைந்ததால்
குறை கூறும் வாய்களுக்கு
பிறையாகி தேய்ந்து போனேன்...
பொழுது புலர்ந்தால்
மாமியாரின் அர்ச்சனைகள்
அந்தி வந்தால்
அத்தானின் இச்சைகள்

மிச்சமான வேளைகளில்

புக்ககத்தாரின் வசவுத் தோரணங்கள்
எச்சமான பொழுதுகளில்
ஏனையோரின் கணக்கில்லாக் காரணங்கள்!
இருப்போரை குளிர்விக்க
நெருப்போடு வேகின்றேன்
மறுப்பேதும் சொல்லாமல்
விருப்பின்றி புரிகின்றேன்

பெண்ணினமே பெண்களை

மிதித்துப் பார்க்குதடி
நம்மினமே நம்மவருக்கு
கொடுமை செய்து ரசிக்குதடி!
பசுமையாய் வளர்ந்த இனம்
பட்டமரமாய்ப் போனதடி
சுடரொளியாய் நிற்கும் இனம்
சுட்ட சங்காய் ஆனதடி...

ஆறுதல் சொல்லி அரவணைக்க

யாருமிங்கு இல்லையடி!
ஊறு விளைவித்து மகிழ்ந்திடவே
பாரினில் பெண்கள் அதிகமடி...